Published : 03 Aug 2021 03:15 AM
Last Updated : 03 Aug 2021 03:15 AM

மின்தடை புகார் மீது உடனுக்குடன் நடவடிக்கை: மின்வாரிய அதிகாரிகளுக்கு எம்எல்ஏ அறிவுறுத்தல்

மின்வாரிய அதிகாரிகளுடனான கலந்தாய்வு கூட்டம், எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா தலைமையில் நேற்று தாம்பரத்தில் நடைபெற்றது.

தாம்பரம்

பொதுமக்களிடமிருந்து மின்தடை தொடர்பாக வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். ஆர். ராஜா மின்வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

தாம்பரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட செம்பாக்கம்,மாடம்பாக்கம், பெருங்களத்தூர், சிட்லபாக்கம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில், மின் வாரிய அதிகாரிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம், எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா தலைமையில் நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தாம்பரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மின்வாரியம் சார்பில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள், புதிய துணை மின் நிலையங்கள், புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் தொடர்பான கலந்தாய்வு நடைபெற்றது. ‘மின்வாரிய அதிகாரிகளை கொண்டால், அவர்கள் தொலைபேசியை எடுப்பதில்லை’ என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மக்கள் தெரிவிக்கும் புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் என எம்.எல்.ஏ தெரிவித்தார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் சென்னை தெற்கு 2, மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஜெ.சுகுமார். தாம்பரம் கோட்ட செயற்பொறியாளர் பாரி ராஜன், உதவி செயற்பொறியாளர் முருகன், அருணாச்சலம், சந்திரசேகரன், மோகன் ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பின்னர் எம்எல்ஏ எஸ்.ஆர். ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: தாம்பரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட மின்வாரிய அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பொதுமக்கள் தொடர்பான புகார்களுக்கு உடனே தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெருங்களத்தூர், சேலையூர் பகுதிகளில் புதிதாக துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மின்தடை ஏற்படாமல்இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்வாரியத்தில் ஆட்கள் பற்றாக்குறை உள்ளது.

இதுகுறித்து, அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும், நெடுஞ்சாலைத் துறை உள்ளாட்சி அமைப்புகள் கேபிள் புதைக்கும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என புகார் எழுந்துள்ளது. அவற்றின் மீது விரைந்து தீர்வு காணப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x