Last Updated : 06 Feb, 2016 01:48 PM

 

Published : 06 Feb 2016 01:48 PM
Last Updated : 06 Feb 2016 01:48 PM

தமிழகத்தில் தலித் தற்கொலைகளும் போலீஸ் கண்காணிப்பும்

தமிழகத்தில் ஓராண்டில் மர்மமான முறையில் மரணமடையும் தலித்துகளின் எண்ணிக்கை சராசரியாக 5000 என்கிறார் காவல்துறையின் மனித உரிமைகள் மற்றும் சமூக நீதிப் பிரிவு கூடுதல் இயக்குநர் ராஜேஷ் தாஸ்.

தமிழகத்தில் தலித்துகள் மர்ம மரணம் தொடர்பான வழக்குகள் தீவிரமாக விசாரிக்கப்பட்டு போலீஸார் சந்தேகம் உறுதியானால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என காவல்துறையின் மனித உரிமைகள் மற்றும் சமூக நீதிப் பிரிவு கூடுதல் இயக்குநர் ராஜேஷ் தாஸ் கூறியுள்ளார்.

போலீஸ் வட்டாரத்தில் கிடைக்கப்பெற்ற தகவல்:

சில வருடங்களுக்கு முன் போலீஸ் உயரதிகாரி ஒருவர் சேலம் மாவட்டத்தில் பதிவான மர்ம மரணம் தொடர்பான வழக்குகளை ஆய்வு செய்தார். அப்போது தலித் இளைஞர் ஒருவர் மர்ம மரணம் குறித்த கேஸ் டைரியில் அந்த இளைஞரின் புகைபடத்தில் சில அடித்தல், திருத்தல் இருந்ததை கவனித்தார். அந்த வழக்கு தொடர்பாக அவர் மேற்கொண்ட மறு விசாரணையில், அந்த நபர் அவரது நண்பருடனான சண்டையில் கொல்லப்பட்டது தெரியவந்தது. பின்னர் அந்த வழக்கு மர்ம மரணம் என்ற பிரிவிலிருந்து திட்டமிட்ட படுகொலை என்ற பிரிவுக்கு மாற்றப்பட்டது. குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

அதன் பிறகு மர்ம மரணங்கள், குறிப்பாக தற்கொலை வழக்குகள் கூடுதல் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. அதை கொலை தற்கொலையா அல்லது தூண்டுதலின் பேரில் நடந்த தற்கொலையா என்ற கோணங்களில் நுணுக்கமாக விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

சேலம் சம்பவத்துக்குப் பின்னர், காவல்துறையின் மனித உரிமைகள் மற்றும் சமூக நீதிப் பிரிவினர் தலித்துகள் சம்பந்தப்பட்ட மர்ம மரணங்கள்; ஆண்/பெண் காணாமல் போகும் வழக்குகளை கூடுதல் கவனத்துடன் கையாள்வதாக போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஓராண்டில் மர்மமான முறையில் மரணமடையும் தலித்துகளின் எண்ணிக்கை சராசரியாக 5000 என்கிறார் காவல்துறையின் மனித உரிமைகள் மற்றும் சமூக நீதிப் பிரிவு கூடுதல் இயக்குநர் ராஜேஷ் தாஸ்.

அவர் மேலும் கூறும்போது, "சில வழக்குகளில் தற்கொலை நிரூபணமாகிறது. ஆனால், சில வழக்குகளில் சந்தேகம் ஏற்படுகிறது.

தேனியில் ஒரு இளம் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். முதலில் அது வெறும் தற்கொலை என்ற அளவிலேயே அணுகப்பட்டது. பின்னர் நடைபெற்ற விசாரணையில், அப்பெண்ணின் கணவர் கூடுதல் வட்டிக்கு கடன் வாங்கி திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்தது தெரியவந்தது. வட்டிக்காரர் அளித்த தொந்தரவினால் மனமுடைந்தே அவர் தற்கொலை செய்து கொண்டதும் உறுதி செய்யப்பட்டது. பின்னர் அந்த நபரை கந்துவட்டி தடை சட்டம் 2003-ல் கீழ் கைது செய்தோம்.

தற்கொலை முயற்சி செய்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது அவர்களிடமிருந்து நீதிபதி முன்னிலையில் மரண வாக்குமூலம் பெறுவதையும் காவல்துறை உறுதி செய்கிறது" என்றார்.

குற்றவாளி என நிர்ணயித்தல் அதிகரிப்பு:

தலித்துகள் சம்பந்தப்பட்ட மர்ம மரண வழக்குகளை காவல்துறை கூடுதல் கவனத்துடன் அணுகுவதால் கடந்த ஆண்டில் (2015) குற்றவாளி என நிர்ணயித்தல் அதிகரித்துள்ளது. தலித்துகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் கடந்த ஆண்டு மட்டும் 11 பேருக்கு ஆயுள் தண்டனை கிடைத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x