குடும்ப தலைவி படம் இருந்தால் மட்டுமே உதவித்தொகையா? - ரேஷன் கார்டில் திருத்தம் மேற்கொள்ள ஆர்வம்: அரசு முறையான அறிவிப்பு வெளியிட வலியுறுத்தல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

ரேஷன் அட்டைகளில் குடும்ப தலைவியின் படம் இருந் தால் மட்டுமே, 'குடும்ப தலைவிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை' திட்டத்தில் பயன்பெற முடியும் என பரவும் தகவலால், ரேஷன் அட்டைகளில் திருத்தம் மேற்கொள்ள பலரும் விண்ணப்பித்து வருகின்றனர். இது குறித்து அரசு முறையான அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் சுமார் 2 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. அவற்றில் அரிசி அட்டை, சர்க்கரை அட்டை, அடையாளத்துக்கு மட்டும் பயன்படுத்தும் அட்டை உள்ளிட்ட 5 வகை அட்டைகள் உள்ளன. இதில், பி.ஹெச்.ஹெச்., பி.ஹெச்.ஹெச்.ஒய் ஆகிய அட்டைகள் வறுமை கோட்டுக்கு கீழே உள்ள மக்களுக்கானது. இவற்றுக்கு மாதம் 35 கிலோ அரிசி விலையில்லாமல் வழங்கப் படுகிறது.

கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது, திமுக தேர்தல் அறிக்கை யில், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வறுமைகோட்டு க்கு கீழே வாழும் குடும்பங்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும். ரேஷன் அட்டையில் குடும்ப தலைவர் புகைப்படத்துக்கு பதிலாக குடும்ப தலைவி படம் இடம்பெற்றிருக்க வேண்டும் என்பது போன்ற தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் ரேஷன் அட்டையில் குடும்ப தலைவர் புகைப்படம் இருப்பவர்கள், அதில் குடும்ப தலைவியின் புகைப்படம் இடம்பெறுவதற்காக கோவில்பட்டி பகுதியில் வட்டாட்சியர் அலுவல கங்களை அணுகி விண்ணப்பித்து வருகின்றனர்.

இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் அ.வரதராஜன் கூறும்போது, “ குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் குறித்தும், அதற்குரிய தகுதிகள் குறித்தும் அரசு இன்னும் அறிவிக்காத நிலையில் மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு படையெடுத்து வருகின்றனர். எனவே, இதனை அரசு தெளிவுபடுத்த வேண்டும். பாகுபாடு இல்லாமல் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மாத உதவித்தொகை வழங்க வேண்டும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in