Published : 22 Dec 2015 08:51 AM
Last Updated : 22 Dec 2015 08:51 AM

கலைகளை வாழ்விப்பவர்கள் உழைக்கும் மனிதர்களே: கவிஞர் வைரமுத்து கருத்து

கலைகளை வாழ்விப்பவர் களாக உழைக்கும் மனிதர்களே இருக்கிறார்கள் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.

தமிழ் இசை சங்கத்தின் 73-ம் ஆண்டு விழா சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கவிஞர் வைரமுத்து பேசியதாவது:

தமிழர்கள் அரசு, நாடு, மொழி, கலை, இசை ஆகிய அனைத் தையும் இழந்து நின்றார்கள். தமிழர்களின் அடையாளமாக இருந்த தமிழிசையை மீட்டெடுக்கும் முயற்சியில் செட்டிநாட்டு அரசர்கள் ஈடுபட்டதன் விளைவாகத்தான் இந்த தமிழ் இசை சங்கம் தோன்றியது. இசைக்கு மனிதன் மனதை பக்குவப்படுத்தும் ஆற்றல் உண்டு. மொழியும், இசையும் சேர்ந்து வரும்போது, அதனை கேட்கும் மனிதர்கள் புது அவதாரம் எடுக்கிறார்கள். எல்லா கலைகளும் உழைக்கும் மனிதர்களையே சென்று சேர வேண்டும். அவ்வாறு செல்லாத கலைகள் எதுவும் வாழாது. என்றைக்கும் கலைகளை வாழ்விப்பவர்களாக உழைக்கும் மனிதர்களே இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக தவில் கலைஞர் ஏ.கே.பழநிவேலுக்கு இசை பேரறிஞர் பட்டமும், ஓதுவார் எஸ்.முத்துகுமாரசாமி தேசிகருக்கு பண்ணிசை பேரறிஞர் பட்டமும் வழங்கப்பட்டன. விழாவில் தமிழ் இசை சங்கத்தின் தலைவர் முன்னாள் நீதிபதி பு.ரா.கோகுலகிருஷ்ணன், மதிப்பியல் செயலர் ஏ.சி.முத்தையா, முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x