Published : 28 May 2021 06:41 AM
Last Updated : 28 May 2021 06:41 AM

உயர் அதிகாரிகளை மாற்றியதால் கரோனா பணிகளில் தொய்வு: முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு குற்றச்சாட்டு

அடுத்தடுத்து உயர் அதிகாரிகளை மாற்றியதால் கரோனா பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு குற்றஞ்சாட்டினார்.

மதுரை மாவட்டத்தில் கரோனாவைத் தடுக்க மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள், சுகாதாரத் துறையுடன் இணைந்து தடுப்பூசி செலுத்துவது மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதில், அதிமுக எம்எல்ஏ-க்கள் தொகுதிகளில் தடுப்பூசி போடும் பணியும், நோய் தடுப்புப் பணியும் மந்தமாக நடப்பதாகவும், பாரபட்சம் இல்லாமல் இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், தேனி எம்பி ப.ரவீந்திரநாத்குமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மதுரை ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகரிடம் புகார் மனு அளித்தனர்.

பின்னர் செல்லூர் கே.ராஜு செய்தியாளரிடம் கூறியதாவது: மதுரையில், கரோனா, புயல் வேகத்தில் பரவி வருகிறது. பரவலுக்கான காரணத்தை தமிழக அரசு கண்டறிய வேண்டும். உயர் அதிகாரிகளை மாற்றியதால் கரோனா பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சரியாக சிகிச்சை வழங்கப்படவில்லை. இதை அதிகாரிகள் கண்காணிப்பதில்லை. ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது, மதுரைக்கு அதிக நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். படுக்கை வசதிகளுக்கு ஏற்ற மருத்துவர், செவிலியர் இல்லை, தமிழக அரசு வெளிப்படை தன்மையோடு செயல்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘மாவட்டத்தில் அதிமுக வெற்றிபெற்ற 5 தொகுதிகளில் பாரபட்சம் பார்க்கப்படுகிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, மருத்துவர்கள் பற்றாக்குறை என்ற காரணத்தைக் கூறி மூடப்பட்டுள்ள அம்மா கிளினிக்கை மீண்டும் திறக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x