Published : 28 Dec 2015 08:37 AM
Last Updated : 28 Dec 2015 08:37 AM

3 புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இதுவரை 60 கி.மீ. தூரம் ஆய்வு நிறைவு: 85 இடங்களில் ரயில் நிலையம் அமைக்க திட்டம்

சென்னையில் மேலும் 3 புதிய மெட்ரோ ரயில் வழித்தடங்களுக்கு திட்ட அறிக்கை தயாரித்து பணிகள் மேற்கொள்ள மெட்ரோ ரயில் அதிகாரிகள், ரைட்ஸ் குழுவினர் இதுவரையில் 60 கி.மீ. தூரம் ஆய்வு நிறைவு செய்துள்ளனர். மொத்தம் 85 இடங்களில் ரயில் நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளனர்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக இரு வழித் தடங்களில் 45 கி.மீ. தூரத் துக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒட்டு மொத்த பணிகளில் சுமார் 60 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. வரும் 2017-க்குள் அனைத்து பணி களையும் முடிக்க மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

இதற்கிடையே, மேலும், 3 வழித் தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்குவது தொடர்பாக பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதாவது, மாதவரத் தில் இருந்து சிறுசேரி வரையிலும், மாதவரத்தில் இருந்து சோழிங்க நல்லூர் வரையிலும், நெற்குன்றத் தில் இருந்து கோயம்பேடு வழியாக வி.இல்லம் வரையிலும் என மொத்தம் 90 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதைகள் அமைக் கப்படவுள்ளன.

இது தொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை போன்ற பெரிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை அதிகம் தேவைப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு மாதவரம் சிறு சேரி, மாதவரம் சோழிங்கநல்லூர், நெற்குன்றம் வி.இல்லம் என மொத்தம் 90 கி.மீ. தூரத்துக்கு 3 புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில்களை இயக்க ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மெட்ரோ ரயில் அதிகாரிகள் 7 பேர் கொண்ட குழுவினரும், ரயில் இந்தியா டெக்னிக்கல் அண்ட் எக்னாமிக்ஸ் சர்வீஸ் (ரைட்ஸ்) தரப்பில் 5 பேர் கொண்ட குழுவினரும் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறோம்.

இதுவரையில் சுமார் 60 கி.மீ. தூரத்துக்கு ஆய்வு செய்துள்ளோம். 0.8 கி.மீ. முதல் 1.5 கி.மீ. தூரம் இடைப்பட்ட தூரத்தில் ஒரு ரயில் நிலையம் அமைக்கப்படும். எனவே, சுமார் 85 இடங்களில் ரயில் நிலையங்களை அமைக்க முடவு செய்துள்ளோம்.

எஞ்சியுள்ள 30 கி.மீ. தூரத்துக்கு ஓரிரு நாட்களில் ஆய்வு நடத்தப்படும். இத்திட்ட மதிப்பீடு ரூ.40 ஆயிரம் கோடி ஆகும். முழு திட்டமதிப்பீடு தயாரிக்கும் பணிகளை விரைவில் முடித்து வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே தமிழக அரசிடம் வழங்கி ஒப்புதல் பெற திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x