Published : 26 May 2021 03:13 AM
Last Updated : 26 May 2021 03:13 AM
ஒரே கப்பலில் 8,819 சரக்குப் பெட்டகங்களை கையாண்டு சென்னை துறைமுகம் புதிய சாதனை படைத்துள்ளது,
இதுகுறித்து, சென்னை துறைமுகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், சென்னை துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி பணிகள் எவ்வித தடையும் இன்றி நடந்து வருகிறது. குறிப்பாக, சரக்குப் பெட்டகங்களை கையாள்வதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை துறைமுகத்தில் உள்ள சிங்கப்பூர் துறைமுகத்துக்கு சொந்தமான சிஐடிபிஎல் சரக்குப் பெட்டக முனையத்துக்கு சிஎம்ஏ, சிஜிஎம் பேர்லிஓஎஸ் என்ற சரக்குக் கப்பல் வந்தது.
இக்கப்பலில் வந்த 4,645 இறக்குமதிக்கான சரக்குப் பெட்டகங்களையும், இதே கப்பலில் ஏற்றிச் செல்லவிருந்த 4,174 ஏற்றுமதிக்கான சரக்குப் பெட்டகங்களுடன் மொத்தம் 8,819 பெட்டகங்களைக் கையாண்டு சென்னை துறைமுகம் புதிய சாதனையை படைத்துள்ளது.
இதற்கு முன்பு கடந்த ஆண்டு டிச.8-ம் தேதி வந்த ஏபிஎல் இங்கிலாந்து கப்பலில் மொத்தமாக 8,397 பெட்டகங்களை கையாண்டதுதான் இதற்கு முந்தைய சாதனையாக இருந்தது.
இந்த சாதனை புரிந்ததற்காக தனியார் சரக்குப் பெட்டக நிர்வாகிகளையும், உறுதுணையாக இருந்த அதிகாரிகளையும், சென்னை துறைமுக பொறுப்புக் கழக தலைவர் சுனில் பாலிவால் மற்றும் துணைத் தலைவர் பாலாஜி அருண்குமார் ஆகியோர் பாராட்டினர்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT