Last Updated : 22 May, 2021 08:13 PM

 

Published : 22 May 2021 08:13 PM
Last Updated : 22 May 2021 08:13 PM

தென்மேற்குப் பருவமழை; மாவட்ட வாரியாக எதிர்பார்க்கப்படும் மழையளவு: வேளாண் பல்கலை. அறிவிப்பு

கோவை

தென்மேற்குப் பருவமழை காலத்துக்கான மாவட்ட வாரியாக எதிர்பார்க்கப்படும் மழையளவு முன்னறிவிப்பு குறித்து, கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்துக் கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இன்று( மே.22) வெளியிட்ட அறிக்கையில் கூறிருப்பதாவது:

''எதிர்வரும் தென்மேற்குப் பருவமழை காலத்துக்கான (ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை) மழை பற்றிய முன்னறிவிப்பு செய்வதற்காக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள, வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம், பயிர் மேலாண்மை இயக்கத்தில் ஆய்வு செய்யப்பட்டது. இதற்காக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடற்பகுதியின் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை மற்றும் தென் மண்டலக் காற்றழுத்தக் குறியீடு ஆகியவற்றை உபயோகித்து ஆஸ்திரேலிய நாட்டிலிருந்து பெறப்பட்ட மழை மனிதன் என்னும் கணிணிக் கட்டமைப்பைக் கொண்டு, 2021-ம் ஆண்டுக்கான தென்மேற்குப் பருவமழை முன்னறிவிப்பு பெறப்பட்டது. இதன்படி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 60 சதவீத வாய்ப்புக்கான எதிர்பார்க்கப்படும் மழையளவு தெரியவந்துள்ளது.

அதன்படி, திருவள்ளூர், வேலூர், தருமபுரி, ஈரோடு, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், கடலூர், நாகப்பட்டினம், நாமக்கல், மதுரை, விருதுநகர், விழுப்புரம், கரூர், சேலம், பெரம்பலூர், சென்னை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் சராசரி மழையளவு இருக்கும். கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, திருப்பூர், தூத்துக்குடி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் சராசரி மழையளவை விட அதிகமாக மழை இருக்கும்.

மாவட்டம் வாரியாக மழையளவு

அதாவது, தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் தமிழகத்தின், அரியலூரில் 380 மி.மீ., சென்னையில் 440 மி.மீ., கோவையில் 200 மி.மீ., கடலூரில் 360 மி.மீ., தருமபுரியில் 360 மி.மீ., திண்டுக்கல்லில் 310 மி.மீ., ஈரோட்டில் 240 மி.மீ., காஞ்சிபுரத்தில் 450 மி.மீ., கன்னியாகுமரியில் 520 மி.மீ., கரூரில் 180 மி.மீ., கிருஷ்ணகிரியில் 420 மி.மீ., மதுரையில் 300 மி.மீ., நாகப்பட்டினத்தில் 250 மி.மீ., நாமக்கல்லில் 370 மி.மீ., பெரம்பலூரில் 260 மி.மீ., புதுக்கோட்டையில் 330 மி.மீ., ராமநாதபுரத்தில் 140 மி.மீ., சேலத்தில் 400 மி.மீ., சிவகங்கையில் 380 மி.மீ., தஞ்சாவூரில் 290 மி.மீ., தேனியில் 230 மி.மீ., திருவள்ளுரில் 460 மி.மீ., திருவாரூரில் 340 மி.மீ., தூத்துக்குடியில் 80 மி.மீ., திருச்சியில் 260 மி.மீ., திருநெல்வேலியில் 150 மி.மீ., திருப்பூரில் 180 மி.மீ., திருவண்ணாமலையில் 440 மி.மீ., நீலகிரியில் 860 மி.மீ., வேலூரில் 460 மி.மீ., விழுப்புரத்தில் 380 மி.மீ., விருதுநகரில் 170 மி.மீ. மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது''.

இவ்வாறு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x