Published : 28 Dec 2015 08:42 AM
Last Updated : 28 Dec 2015 08:42 AM
‘தி இந்து’ செய்தி எதிரொலியால் சீரமைக்கப்பட்ட ஆவடி வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு சாலை ஒரே மாதத்தில் மழைக்கு சேதம் அடைந்துள்ளது. தரமற்ற சாலை அமைத்ததற்காக சம்பந்தப் பட்டவர்கள் மீது உரிய நடவடுக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஆவடி நகராட்சிக்குட்பட்ட ஏரியில் கடந்த 1993-ம் ஆண்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் கட்டப்பட்டன. இங்கு ஆறாயிரம் வீடுகள் உள்ளன. 30 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இக்குடியிருப்பு ஏற்படுத்தப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் போதிய சாலை வசதி செய்யப்படவில்லை.
இந்நிலையில், இப்பகுதியில் உள்ள 60 அடி அகல பிரதான சாலை பாதியளவுக்கு தார் சாலையாக அண்மையில் செப்பனிடப்பட்டது. ஆனால் முழுச் சாலையும் ரூ.50 லட்சம் செலவில் போடப்பட்டதாக கணக்கு எழுதப்பட்டிருந்தது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்ததில் தெரியவந்தது. இதை அம்பலப்படுத்தி கடந்த மாதம் ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. இதையடுத்து அடுத்த சில தினங்களில் மீதமுள்ள சாலையும் தார் சாலையாக அமைக்கப்பட்டது.
இந்நிலையில், அண்மையில் பெய்த கனமழைக்கு இச்சாலை முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சாலை குண்டும், குழியுமாக மாறியது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்களில் சிக்குகின்றனர். தரமற்ற முறையில் ஒப்புக்கு சாலை அமைத்ததால்தான் ஒரே மாதத்துக்குள் சேதம் அடைந்துள்ளதாகவும் இச்சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மீதும் நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT