Published : 15 May 2021 03:13 AM
Last Updated : 15 May 2021 03:13 AM

எச்பிஎல் நிறுவனத்தில் கரோனா தடுப்பூசி தயாரித்தால் ஆண்டுக்கு 30 கோடி பேருக்கு தடுப்பூசி போடலாம்: திருப்போரூர் எம்எல்ஏ தகவல்

திருப்போரூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட சட்டப்பேரவை உறுப்பினர் பாலாஜி.

திருப்போரூர்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் உள்ள அரசு மருத்துவமனை, கேளம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ வசதிகள், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் தொடர்பாக திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்கள், செவிலியர்களிடம் கேட்டறிந்தார். ஆய்வின்போது, திமுக நகரச் செயலர் தேவராஜன், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் எல்லப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் எம்எல்ஏ பாலாஜி கூறியதாவது: கரோனாவைத் தடுக்க பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம். திருமணி கிராமத்தில் உள்ள மத்திய அரசின் எச்பிஎல் நிறுவனத்தில் தடுப்பூசி தயாரிப்பு தொழிற்சாலை அமைந்துள்ளது. இதில், பல்வேறு நவீன கட்டமைப்புகள் மற்றும் இயந்திரங்கள் உள்ளன. இந்த தொழிற்சாலையில் தடுப்பூசி தயாரிப்பு தொடர்பாக சில தனியார் நிறுவனங்கள் ஆய்வு நடத்தி, தடுப்பு மருந்துகள் தயாரிப்பதற்கான சூழல், வசதிகள் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த தொழிற்சாலையில் கரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யப்பட்டால், ஆண்டுக்கு 30 கோடி பேருக்கு தடுப்பூசி போட முடியும். எனவே, இந்த தொழிற்சாலையில் தடுப்பூசி உற்பத்தியை தொடங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது மத்திய, மாநில அரசுகள் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் இணைந்து தடுப்பூசி உற்பத்தியை தொடங்கலாம். இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், விசிக சார்பில் கோரிக்கை விடுத்துள்ளோம்.

மேலும், இங்கு தடுப்பூசி உற்பத்தியை தொடங்குவது தொடர்பாக முதல்வர் பரிசீலித்து வருவதாக, சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இவ்வாறு எம்எல்ஏ கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x