Published : 25 Apr 2021 02:15 PM
Last Updated : 25 Apr 2021 02:15 PM

ஸ்ரீபெரும்புதூர் ஆக்சிஜனை தமிழகத்துக்கே வழங்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

சென்னை

தமிழகத்தில் தற்போது தொற்று பாதித்து சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. இது மேலே குறிப்பிட்டபடி ஆக்சிஜன் தேவையை அதிகரித்துள்ளது, ஆகவே ஸ்ரீபெரும்புதூர் ஆக்சிஜனை மற்ற மாநிலங்களுக்கு அனுப்பாமல் தமிழகத்துக்கே ஒதுக்க வேண்டும் என முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் எழுதிய கடிதம் வருமாறு:

“தமிழகத்தில் மருத்துவம் சார்ந்த ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருகிறது. அதிகளவு ஆக்சிஜன் தேவையான கரோனா நோயாளிகள் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதன் காரணமாக தமிழ்நாட்டில் போதுமான ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியதும், மாநிலத்தின் வளர்ந்து வரும் மருத்துவ ஆக்சிஜன் தேவைகள் குறித்து உங்கள் அன்பான கவனத்துக்கு கொண்டுவருகிறேன்.

தற்போதைய சூழ்நிலையில் கரோனா தொற்றைக் குறைக்க அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. தற்போது தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தித் திறன் 400 மெட்ரிக் டன் என்று இருக்கும் நிலையில் விரைவில் 450 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படும் நிலை வரலாம்.

2020 ஆம் ஆண்டில் முந்தைய கரோனா பரவலின்போது போது அதிகபட்சமாக 58,000 ஆக இருந்த தொற்று எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, ​தற்போது தொற்று பாதித்து சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது.

இது மேலே குறிப்பிட்டபடி ஆக்சிஜன் தேவையை அதிகரித்துள்ளது. தடையற்ற மற்றும் போதுமான ஆக்சிஜன் விநியோகத்தை வழங்க அனைத்து முயற்சிகளும் அரசால் மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்கிடையில், தமிழகத்திற்கான சமீபத்திய தேசிய மருத்துவ ஆக்சிஜன் ஒதுக்கீடு திட்ட ஒதுக்கீட்டில் 220 மெட்ரிக் டன் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இந்த தவறான நிர்ணயத்தின் அடிப்படையில், 80 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள உற்பத்தி ஆலையிலிருந்து ஆந்திரா மற்றும் தெலங்கானாவிற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

இது தமிழகத்தில் தற்போதுள்ள ஆக்சிஜன் நுகர்வு உற்பத்தி திறனை விட குறைவாக உள்ளது என்ற தவறான நிலைப்பாட்டின் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினையில், பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு (பெசோ) தரவுப்படி, தமிழ்நாட்டில் ஏற்கனவே மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ள 220 மெட்ரிக் டன் மட்டுமே என்கிற அளவைத்தாண்டி ஆக்சிஜன் நுகர்வு 310 மெட்ரிக் டன் என்கிற அளவை எட்டியுள்ளது. மேலும், ஆக்சிஜன் ஒதுக்கீடு செய்யப்பட்ட மாநிலங்களில் எங்களை விட குறைந்த எண்ணிக்கையிலான கரோனா தொற்று எண்ணிக்கை உள்ளன.

மேலும் பெரிய எஃகு தொழிற்சாலைகள் அந்தந்த மாநிலத்திற்குள் அல்லது மாநிலங்களுக்கு அருகில் உள்ளன. ஆனால், தென்னிந்தியாவில் இரண்டாவது பெரிய அளவிலான தொற்று பாதிப்புகளுடன் உள்ள சென்னை நகரத்திற்கு அருகிலுள்ள ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருந்து ஆக்சிஜன் சப்ளை செய்யப்படவில்லை.

இதை உடனடியாக சரிசெய்ய வேண்டும். தமிழகம் இதுவரை ஆக்சிஜன் செல்வதை தடுக்க எந்தவொரு கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை, மற்ற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் தேவைக்கு உதவ எப்போதும் தயாராக இருந்தாலும், தமிழகத்தின் தேவை மிக அதிகமாக இருக்கும்போது ஆக்சிஜனை கட்டாயமாக மற்ற மாநிலங்களுக்கு அனுப்புவது தேவை இருக்கும் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் பெரும் நெருக்கடிக்கு வழிவகுக்கும்.

எனவே, தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருந்து 80 கிலோ லிட்டர் ஆக்சிஜனை (கிலோ லிட்டர் (1 கே.எல்) ஆயிரம் லிட்டருக்கு (1000 லி) சமம்) மற்ற மாநிலங்களுக்கு அனுப்புவதை உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x