Published : 25 Apr 2021 12:02 PM
Last Updated : 25 Apr 2021 12:02 PM

தமிழகத்தில் முழு ஊரடங்கு தொடங்கியது: தலைநகர் சென்னை வெறிச்சோடியது

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு இன்று தொடங்கியது. வாகனங்கள் இயக்கமின்றி, பொதுமக்கள் நடமாட்டமின்றி தமிழகம் முழுவதும் முக்கிய சாலைகள் வெறிச்சோடின.

கரோனா இரண்டாவது அலை பரவலால் தற்போதுவரை 1 லட்சம் பேர் வரை வீட்டுத்தனிமையிலும், மருத்துவமனையிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தினசரி தொற்று எண்ணிக்கை 9% வரை அதிகரித்து வருகிறது. தினசரி தொற்று எண்ணிக்கை தமிழகத்தில் நேற்று 14,852 ஆக பதிவானது, சென்னையில் தமிழக பரவலில் 25% என்கிற அளவுக்கு உள்ளது.

கரோனா முதல் அலையைவிட இரண்டாவது அலையின் தாக்கம் மும்மடங்கு வேகத்திலும், அதன் இரட்டிப்பாகும் தன்மை 8 நாட்களுக்கும் குறைவாக உள்ளது. இதனால் நோய்த்தொற்றின் வேகம் கடுமையாக அதிகரித்து வருகிறது. கரோனா பரவலைக் கட்டுபடுத்த ஊரடங்கில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டது. பிரதமருடன் நடத்திய ஆலோசனையை அடுத்து நேற்று கூடுதலாக புதிய கட்டுப்பாடுகளை அரசு விதித்தது.

அதன்படி திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், சலூன், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்டவைகளும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது, இந்நிலையில் ஏற்கெனவே அறிவித்தப்படி ஞாயிறு முழு ஊரடங்கு இன்று அமலானது.

இரவு நேர ஊரடங்கையும் சேர்த்து 36 மணி நேர ஊரடங்கு இன்று அமலானது. அவசியமான காரணமின்றி யாரும் வெளியில் வரக்கூடாது, திருமணம் சுப நிகழ்ச்சிகளில் 100 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

சென்ட்ரல் ரயில் நிலையம்

அவசியமின்றி வெளியில் வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும், அவர்களின் வாகனமும் பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டதால் வாகனப் போக்குவரத்து, பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. சென்னையிலும் எப்போதும் பரபரப்பாக இயங்கும் அண்ணா சாலை, பூந்தமல்லி சாலைகள், கோயம்பேடு சாய்கறி சந்தை, பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

முழு ஊரடங்கு காரணமாக உணவகங்களில் பார்சல் சேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் பல்வேறு முக்கிய உணவகங்கள் முன் ஸ்விக்கி , சொமாட்டோ ஊழியர்கள் காத்திருந்து உணவைப்பெற்று விநியோகம் செய்ய காத்திருந்ததை காண முடிந்தது.

பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் வருவதை கண்காணிக்க சாலைத்தடுப்புகள் அமைத்து போலீஸார் கண்காணித்து வருகின்றனர். தேவையின்றி வாகனங்கள் வந்தால் எச்சரித்தும், அபராதம் விதித்தும் அனுப்பி வைக்கின்றனர். சில இடங்களில் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படுகின்றன.

முழு ஊரடங்கு இருந்தாலும் அனைத்து தடுப்பூசி மையங்களிலும் தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், தடுப்பூசி போட வருவோர் அவர்களுக்கான சரியான வழிகாட்டுதல் இல்லாத காரணத்தால் வெளியில் வராததால் மக்கள் வரத்து குறைவாகவே இருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x