Published : 28 Dec 2015 08:45 AM
Last Updated : 28 Dec 2015 08:45 AM
மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கடைப் பிடிக்க வேண்டிய பல்வேறு கட்டுப்பாடுகள் குறித்து போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும், கிழக்கு கடற்கரைச் சாலையில் அதிவேக மாக வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுப்பதுடன் வாகனமும் பறிமுதல் செய்யப் படும் என்று காவல் துறை எச்சரித்துள்ளது.
கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவில் கடற்கரை விடுதிகள் மற்றும் பெரிய ஹோட்டல்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் ஆண்டுதோறும் புத்தாண்டையொட்டி அதை கொண்டாடுவதற்கான கேளிக்கை விழாக்கள் நடத்தப்படுவது வழக்கம்.
அவ்விழாக்களில் அசம்பா விதங்களை தடுக்கும் வகையில் விடுதிகள் மற்றும் ஹோட்டல் களில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நேற்று முன்தினம் மாமல்லபுரத்தில் நடைபெற்றது. மாமல்லபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் சி.டி.சக்கரவர்த்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட விடுதி மற்றும் ஹோட்டல் நிர்வாகத்தினர் பங்கேற்றனர்.
ஹோட்டல் நிர்வாகம்
அதில் மாமல்லபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் சி.டி.சக்கரவர்த்தி பேசியதாவது: புத்தாண்டை ஒட்டி கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தும்போது, அசம்பாவிதம் ஏதேனும் ஏற்பட்டால் அதற்கு சம்பந்தப்பட்ட ஹோட்டல் நிர்வாகமே பொறுப்பு. அனுமதிக்கப்பட்ட நேரமான இரவு 12 மணி வரை மட்டுமே கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். இரவு 12 மணி வரை மட்டுமே அரசு அனுமதி பெற்ற மதுக்கூடங்களை திறந்து வைத்திருக்க வேண்டும்.
நிகழ்ச்சிகளுக்காக மேடை அமைப்பவர்கள் பொதுப் பணித்துறையிடம் உரிய சான்று பெற வேண்டும். நீச்சல் குளங்களில் மது அருந்தியிருப்பவர்களை அனுமதிக்க கூடாது. தீயணைப்பு துறையினரின் அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே வானவேடிக்கைகளை நடத்த வேண்டும்.
அசம்பாவிதங்களைத் தடுக்க அனைத்து விடுதிகள் மற்றும் ஹோட்டல்களில் கட்டாயம் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். தனியார் பாதுகாலர்களாக முதியவர்களை நியமிப்பதற்கு பதில், பலம் மிக்க இளைஞர்களை நியமிக்க வேண்டும்.
மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மது போதையில் கார் மற்றும் பைக்குகளை கிழக்கு கடற்கரை சாலையில் வேகமாக ஓட்டுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வாகனமும் பறிமுதல் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாமல்லபுரம் காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT