Published : 11 Dec 2015 10:11 AM
Last Updated : 11 Dec 2015 10:11 AM
வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட வர் படகில் செல்லும்போது தவறி விழுந்து பலியானார்.
சென்னை சைதாப்பேட்டை பழைய ஜோதியம்மாள் நகர் 2 வது தெருவைச் சேர்ந்தவர் கண்ணப்பன் (56). இவருக்கு ராஜன் என்ற மகனும், ஜான்சிராணி என்ற மகளும் உள்ளனர். இவர்கள் திருமணமாகி அதே பகுதியில் தனித்தனியாக வசிக்கிறார்கள்.
கடந்த 1 ம் தேதி அடையாறில் வந்த வெள்ளத்தில் கண்ணப்பனின் வீடு மூழ்கியது. இதைத்தொடர்ந்து அவர், தனது மகள் ஜான்சி வீட் டுக்கு புறப்பட்டார். வழியில் வெள் ளம் அதிகமாக இருந்ததால் அருகே இருந்த உறவினரின் வீட்டில் தங்கி விட்டார். மறுநாள் காலை அவர் களை அழைத்து செல்ல மீட்புப் படகு வந்தது. அதில் கண்ணப்பனும் அதே பகுதியைச் சேர்ந்த மேலும் 7 பேரும் ஏறிக்கொண்டனர்.
படகு சென்றுகொண்டிருந்த போது ஒரு இடத்தில் பலமாக அசைந்தது. படகின் ஓரத்தில் அமர்ந்திருந்த கண்ணப்பன் இதில் நிலைதடுமாறி வெள்ளத்துக்குள் விழுந்து விட்டார். அவரை மீட்க மீட்பு குழுவினரும், மற்றவர்களும் முயற்சி செய்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. சில மணி நேர தேடுதலுக்கு பின்னர், அவரது உடலை மீட்டனர்.
இதுபற்றி கண்ணப்பனின் மகன் ராஜன் கூறும்போது, “மிகவும் கஷ்டப்பட்டு தங்கை ஜான்சி ராணிக்கு 15 நாட்களுக்கு முன்புதான் திருமணம் செய்து வைத்தார். வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் வெள்ளம் அடித்துச் சென்று விட்டது. இப்போது தந்தையும் எங்களை விட்டு சென்று விட்டார்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT