Published : 11 Apr 2021 03:16 AM
Last Updated : 11 Apr 2021 03:16 AM

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கோயம்பேடு சந்தையில் குவிந்த வியாபாரிகள் கூட்டம்: கரோனா தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரம்

கோயம்பேடு சந்தைக்கு ஞாயிற்றுக் கிழமையான இன்று விடுமுறை என்பதால் காய்கறிகளை வாங்கநேற்று வியாபாரிகள் கூட்டம் அலைமோதியது. இது ஒருபுறமிருக்க, கரோனா தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.

தமிழகம் முழுவதும் தற்போது கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து, கோயம்பேடு சந்தையில் சில்லறை வியாபாரம் செய்வதற்கு சனிக்கிழமை (நேற்று) முதல் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில்லறை வியாபாரிகள் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சில்லறை வியாபாரத்துக்கு நேற்று அனுமதி வழங்கப்பட்டது. இதுதொடர்பாக, சில்லறை வியாபாரிகளுடன் அதிகாரிகள் நாளை நடத்தவுள்ள பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எட்டப்பட உள்ளது.

இந்நிலையில், கோயம்பேடு சந்தைக்கு இன்று விடுமுறைஎன்பதால் நேற்று அதிகாலையிலேயே வியாபாரிகளின் வருகைஅதிகமாக இருந்தது. 2 நாட்களுக்கு தேவையான காய்கறிகளை வியாபாரிகள் மொத்தமாக வாங்கி சென்றனர். நேரம் செல்லச் செல்ல கூட்டம் அலைமோதியது.

இது ஒருபுறமிருக்க, கோயம்பேடு சந்தையின் நுழைவு வாயிலில் வாகனங்களின் மீது நேற்று கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. முகக் கவசம் அணிந்து வந்தவர்கள் மட்டுமே கோயம்பேடு சந்தைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், முகக் கவசம் அணியவேண்டும் என்பது உள்ளிட்ட கரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஒலிபெருக்கிகளில் தொடர்ந்து ஒலிபரப்பப்பட்டு வந்தது. மேலும்,கோயம்பேடு சந்தை நிர்வாக அதிகாரிகளும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x