Published : 10 Apr 2021 03:13 AM
Last Updated : 10 Apr 2021 03:13 AM

கரோனா தடுப்பு பணியில் மீண்டும் களமிறங்கிய காவல் துறை

சென்னை

கரோனா தடுப்புப் பணியில் போலீஸார் மீண்டும் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். முகக்கவசம் அணியாமல் சாலையில் செல்பவர்கள், வாகனம் ஓட்டிச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பதுடன் அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.

கரோனா தடுப்புப் பணியில் மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்களுடன் காவல்துறையினரும் ஒருங்கிணைந்து முன்கள வீரர்களாக பணியாற்றி வந்தனர். இதன் காரணமாக கரோனா தொற்று கட்டுக்குள் வந்தது. முழு ஊரடங்கும் படிப்படியாக தளர்த்தப்பட்டது. காவல்துறையினர் தங்களின் வழக்கமான பணிகளுக்குத் திரும்பினர். இதையடுத்து சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த 6-ம் தேதி வாக்குப்பதிவும் நிறைவடைந்தது. போலீஸார் தேர்தல் பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டு சட்டம் ஒழுங்கு, குற்றத் தடுப்பு, கண்காணிப்பு பணிகளில் முழு அளவில் ஈடுபட்டனர்.

தற்போது, கரோனா 2-வது அலை பரவ ஆரம்பித்துள்ளது. இதனால், தற்போது மேலும் பல கட்டுப்பாடுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. தடையை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து கரோனா தடுப்பு பணிகளில் சென்னை காவல்துறை இறங்கியுள்ளது. முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் நடமாடுபவர்கள், வாகனங்களில் செல்பவர்களை பிடித்து போலீஸார் அபராதம் விதிக்கத் தொடங்கியுள்ளனர்.

கடைகள், வணிக நிறுவனங்களில் தனிமனித இடைவெளி இல்லாமல் இருந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு காவல் ஆணையர் அறிவுரை வழங்கியுள்ளார்.

மேலும், முகக்கவசம் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு முகக்கவசம் வழங்குவதுடன், அவர்களை தனியாக ஒரு இடத்தில் நிற்கவைத்து, கரோனாவால் ஏற்பாடும் பாதிப்புகள், முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து அவர்களுக்கு போக்குவரத்து போலீஸார் அறிவுரை வழங்கி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x