Last Updated : 02 Apr, 2021 03:18 PM

 

Published : 02 Apr 2021 03:18 PM
Last Updated : 02 Apr 2021 03:18 PM

நான்தான் முதல்வர்; சந்தேகமே வேண்டாம்: காரைக்காலில் ரங்கசாமி பேச்சு

கூட்டணியில் அதிக தொகுதிகளைப் பெற்றிருக்கும் நான்தான் முதல்வர். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம் என என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், புதுச்சேரி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான என்.ரங்கசாமி கூறியுள்ளார்.

நடைபெறவுள்ள புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில், காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிடும், தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினரான சந்திரபிரியங்காவுக்கு வாக்குகள் கோரி, பூவம், வரிச்சிக்குடி உள்ளிட்ட பலவேறு பகுதிகளில் இன்று (ஏப்.2) ரங்கசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

''கடந்த 5 ஆண்டு கால காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியில், புதுச்சேரி 15 ஆண்டு காலம் பின்னோக்கிச் சென்றுவிட்டது. 5 ஆண்டுகளில் 10 பேருக்கு கூட வேலை வாய்ப்புகளை வழங்கவில்லை. ஆனால், எத்தனை பேர் வேலை இழந்துள்ளனர் என்றுதான் கணக்கெடுக்க வேண்டியிருக்கிறது. பள்ளி மாணவர்களுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. முதியோர் உதவித்தொகை உயர்த்தப்படவில்லை. எந்தவொரு பிரிவு மக்களுக்கான நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை.

எதிர்க்கட்சிகள் மீதும், ஆளுநர் மீதும் பழி போட்டுக்கொண்டு, போராட்டங்கள் நடத்திக்கொண்டே 5 ஆண்டுகளைக் கடத்தி விட்டனர். ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களே அரசை எதிர்க்கும் ஆட்சியாகத்தான் இந்த ஆட்சி இருந்தது. புதுச்சேரியில் துணைநிலை ஆளுநருக்குதான் அதிகாரம் என்பது தெரிந்திருந்தும் ஆளுநர் மீது குறை கூறினர்.

2011-ம் ஆண்டு என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது பொற்கால ஆட்சியாக இருந்தது. பல்வேறு நலத்திட்டங்களைக் கொண்டுவந்தோம். அந்தத் திட்டங்களைச் செயல்படுத்தியிருந்தாலே போதும். அனைத்து மக்களுக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும். மக்களைப் பற்றி அவர்கள் சிந்திக்கவே இல்லை.

புதுச்சேரியில் அனைத்து மக்களின் நலன்களும் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று புதிய நல்லாட்சியைக் கொண்டுவர வேண்டும். அதற்கு என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக, பாமக உள்ளிட்ட கூட்டணியை ஆதரிக்க வேண்டும்.

முதல்வராக இவர் வருவாரா என்று சிலர் கேட்கலாம். கூட்டணியில் அதிக தொகுதிகளைப் பெற்று போட்டியிடுவது என்.ஆர்.காங்கிரஸ்தான். அதனால் நிச்சயமாக முதல்வராக நான்தான் இருப்பேன். அதில் சந்தேகமே வேண்டாம்''.

இவ்வாறு ரங்கசாமி பேசினார்.

அதிமுக காரைக்கால் மாவட்டச் செயலாளர் எம்.வி.ஓமலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x