Published : 02 Apr 2021 02:49 PM
Last Updated : 02 Apr 2021 02:49 PM

திமுக கூட்டணிக்கு மாபெரும் வெற்றியைத் தர மக்கள் காத்திருக்கிறார்கள்: வேல்முருகன்

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கு மாபெரும் வெற்றியைத் தர மக்கள் காத்திருக்கிறார்கள் என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும், திமுக கூட்டணியின் பண்ருட்டி தொகுதி வேட்பாளருமான வேல்முருகன் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

“மாபெரும் வெற்றியை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்குத் தர மக்கள் காத்திருக்கிறார்கள். கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் மக்கள் ஆதரவளிக்கிறார்கள். நான் சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாத இந்த பத்து ஆண்டு காலத்தில் எந்தப் புதிய முன்னேற்றமும் ஏற்படவில்லை. நான் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது அமைத்துக் கொடுத்த சிமெண்ட் சாலைகள், தெருவிளக்குகள், குடிநீர் குழாய்கள் மட்டும்தான் தற்போது உள்ளன.

புதிய தொழிற்சாலைகள், பெண்கள், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை இந்த அரசு ஏற்படுத்தித் தரவில்லை. சுதந்திர வரலாற்றில் பண்ருட்டி தொகுதியில் ரூ.100 கோடி செலவில் அண்ணா பல்கலைக்கழகத்தைக் கொண்டுவரச் செய்தேன். லாட்டரிக்குத் தடைச் சட்டம் கொண்டுவந்தேன்.

நான் யார் என்பதை தொகுதி மக்களும், மாவட்ட மக்களும் புரிந்து வைத்திருக்கிறார்கள். எங்கள் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று நம்புகிறேன்” என்று பண்ருட்டி வேல்முருகன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x