Published : 27 Mar 2021 03:14 AM
Last Updated : 27 Mar 2021 03:14 AM
இலவசங்கள் ஏழ்மையை போக்காது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை எம்எம்டிஏ சந்தை பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று காலை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:
ஒவ்வொரு தொகுதியிலும் எங்களுடைய வேட்பாளர்கள், குறிப்பிட்ட காலத்துக்குள் தொகுதி சார்ந்த பிரச்சினைகளை தீர்ப்பேன் என்று பத்திரத்தில் கையெழுத்து போட்டுள்ளனர். பத்திரத்தில் கையெழுத்து போட்டு தரும் தைரியம் நேர்மையாளர்களுக்கு மட்டுமே வரும். அப்படிப்பட்ட கூட்டத்தை உருவாக்கியுள்ளேன் என்பது எனக்கு பெருமை.
இலவசங்கள் ஏழ்மையை போக்காது. ஒரு நாள் விருந்து வைத்தால் வாழ்நாள் முழுவதும் சாப்பாட்டுக்கு வழி ஆகாது. ஆனால், உழைப்புக்கு ஊதியம் தேடிக் கொடுத்தால் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு மட்டுமின்றி குடும்பத்துக்கே சோறு போடும். மக்கள் நீதி மய்யம், காகிதம் இல்லாமல் இயங்கும் முதல் டிஜிட்டல் கட்சி.
இது ஆட்சிமுறைக்கு வந்தாலும் தொடரும். இல்லத்துக்கு ஒரு கணினி என்பது இணையதளத்தில் விளையாடுவதற்கு மட்டும் அல்ல. அரசுடன் தொடர்பு கொண்டு திட்டங்ளை ஏன் செய்யவில்லை என்று தட்டிக் கேட்கலாம்.
ஊழலை ஒரே இரவில் ஒழிக்க முடியாது. ஆனால், தலைமை நேர்மையாக இருந்தால் கடைசி வரை அந்த நேர்மை நீடிக்கும். திருட்டு நடந்தது நடந்து போய்விட்டது. இனி அதை நடக்க விட மாட்டேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதைத் தொடர்ந்து, ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்ட கமல்ஹாசன், “இலவசங்கள் தருவது என்பது மக்கள் கட்டிய வரி பணத்தில் இருந்து பெரும் பகுதியை எடுத்து கொண்டு சில்லறையை தூக்கிப்போடுவதுதான். சில அரசியல்வாதிகள் ஏழ்மையை ஜாக்கிரதையாக பாதுகாத்து வைத்துள்ளார்கள்.
ஏழ்மை இருந்தால்தான் தேர்தல் நேரத்தில் வாக்குகளை பணத்துக்கு வாங்க முடியும். ஏழ்மையை தூக்கி விட்டால் கேள்வி கேட்பீர்கள். நாங்கள் ஏழ்மை கோட்டினை பற்றி பேசவில்லை.
உங்களை ஏழ்மை கோட்டில் இருந்து செழுமை கோட்டுக்கு கொண்டு போக வேண்டும். அப்படி நடந்து விட்டால் கரோனா வந்தாலும், ஜிஎஸ்டி வந்தாலும் நாம் வறுமை கோட்டுக்கு கீழே போக மாட்டோம்" என்றார்.
முன்னதாக, அம்பத்தூர் பேருந்து நிலையம் அருகே கமல்ஹாசன் திறந்த வேனில் நின்றபடி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT