Last Updated : 15 Mar, 2021 09:07 PM

 

Published : 15 Mar 2021 09:07 PM
Last Updated : 15 Mar 2021 09:07 PM

திருச்சி தனியார் பள்ளி ஆசிரியர், கல்லூரி மாணவர்களுக்கு கரோனா: தடுப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்க சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

திருச்சி மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அனைவரும் கரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

கரோனா நோய் பரவல் படிப்படியாக குறைந்திருந்த நிலையில், பல்வேறு இடங்களிலும் தற்போது மீண்டும் பரவி வருகிறது. திருச்சி மாவட்டத்திலும் கரோனா பாதிப்பு லேசாக அதிகரித்து வருவதால், கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் சுகாதாரத் துறையுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

குறிப்பாக, மருத்துவத் துறையினர் உட்பட அனைத்துத் தரப்பினருக்கும் கரோனா தடுப்பூசிகள் இடப்பட்டு வரும் நிலையில், பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் வருவோருக்கு ரூ.200, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியை மற்றும் மாணவிகள் என 57 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், திருச்சியில் பாரதியார் சாலையில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர், திண்டுக்கல் சாலையில் உள்ள தனியார் கல்லூரி மாணவர் மற்றும் சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் உட்பட 15 பேர் ஆகியோருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை அலுவலர்கள் கூறியது:

கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டவர்கள் பயிலும் கல்வி நிலையங்கள், அவர்களது வகுப்பறை, ஹாஸ்டல் ஆகியவை கிருமிநாசினி மூலம் தூய்மைப்படுத்தப்பட்டுவிட்டது.

கரோனாவால் பாதிக்கப்பட்ட திருச்சி தனியார் பள்ளி ஆசிரியர் புதுக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். திருச்சி தனியார் கல்லூரி மாணவர் மற்றும் அரசு பொறியியல் கல்லூரியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பரிசோதனைக்குப் பிறகு வீட்டில் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அனைவரும் சீரான நிலையில் உள்ளனர்.

மேலும், கரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட அரசு பொறியியல் கல்லூரியில் கரோனா பரிசோதனைக்காக 200 பேரிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது. திருச்சி தனியார் பள்ளி மற்றும் திருச்சி தனியார் கல்லூரி ஆகியவற்றில் பிறருக்கு ஓரிரு நாட்களில் சளி மாதிரி சேகரிக்கப்படவுள்ளது.

திருச்சி மாவட்டத்தி்ல் கரோனா பரவல் தீவிரமாக இல்லை. ஆனாலும், மக்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது. கரோனாவில் இருந்து தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதுடன், கைகளை அடிக்கடி கழுவி தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். அதிக கூட்டம் உள்ள பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x