Last Updated : 15 Mar, 2021 07:44 PM

 

Published : 15 Mar 2021 07:44 PM
Last Updated : 15 Mar 2021 07:44 PM

தேனியில் நிலமற்றவர்களுக்கு நிலம் வழங்கியதில் முறைகேடு:  டிஆர்ஓ விசாரிக்க உத்தரவு

தேனியில் நிலமற்றவர்களுக்கு நிலம் வழங்கியதில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக தேனி மாவட்ட வருவாய் அலுவலர் 8 வாரங்களில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேனியைச் சேர்ந்த சரவணா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

தேனி வடவீரநாயக்கன்பட்டியில் 120 பேருக்கு சுமார் 240 சென்ட் நிலம் வழங்கப்பட்டது. இதில் முறைகேடு நடைபெற்றுள்ளது. அரசு நிலம் நிலமற்ற ஏழைகளுக்கு மட்டுமே வழங்க வேண்டும். இந்த விதியை மீறி நிலம் வைத்திருப்பவர்களுக்கும் நிலம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தேன். அந்த மனு தொடர்பாக தேனி மாவட்ட வருவாய் அலுவலர் விசாரிக்க உத்தரவிடப்பட்டது. இந்த விசாரணை 2019-ம் ஆண்டிலேயே தொடங்கிய நிலையில் தற்போது வரை முறைகேடு தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, வடவீரநாயக்கன்பட்டி பகுதியில் பூமிதான திட்டத்தில் நிலம் வழங்கியதில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்த விசாரணையை விரைவில் முடிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. நிலம் வழங்கியதில் நடைபெற்றுள்ள முறைகேடு குறித்து தேனி மாவட்ட வருவாய் அலுவலர் 8 வாரங்களில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு மனுவை முடித்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x