Published : 06 Nov 2015 12:06 PM
Last Updated : 06 Nov 2015 12:06 PM
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் காட்டு யானை தாக்கியதால் உயிரிழந்த 4 நான்கு பேரது குடும்பத்துக்கும் தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் வட்டம், ஆலாந்துறை கிராமத்தைச் சேர்ந்த சம்பத்குமார் என்பவரின் மகன் தர்மன் 5.11.2015 அன்று வலையன் குட்டை பகுதி அருகே காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், வடகாடு கிராமத்தைச் சேர்ந்த கருப்பண்ணன் என்பவரின் மனைவி பாப்பா 19.8.2015 அன்று தனது வீட்டினருகே காட்டு யானை தாக்கியதில் பலத்த காயமடைந்து மருத்துவமனைவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டம், கடினமாலா கிராமத்தைச் சேர்ந்த பாலன் என்பவரின் மகன் ராமசாமி 20.8.2015 அன்று கரக்கோடுமட்டம் அருகே காட்டு யானை தாக்கியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கோயம்புத்தூர் மாவட்டம், கரடிமடை பிரிவு, கூச்சமலை கிழக்குச் சுற்று வனக் காப்பாளர் முத்துசாமி 7.9.2015 அன்று கண்ணம்மநாயக்கனூர் ஒத்தக்கால் மண்டபம் அருகே காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது, காட்டு யானை தாக்கியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT