Published : 03 Mar 2021 03:29 AM
Last Updated : 03 Mar 2021 03:29 AM

குமரியில் கல் குவாரி உரிமம் வழங்கியதில் முறைகேடு: சிபிசிஐடி விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

கோப்புப்படம்

மதுரை

குமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதி திமுக எம்எல்ஏ மனோ தங்கராஜ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

கல்குளம் தாலுகாவில் கப்பியறையில் கருணைமாதா மலை என்ற குருசுமலை உள்ளது. இந்த மலையை சுற்றி பல கிராமங்கள், கண்மாய்கள் உள்ளன. இந்த மலையில் கல் குவாரி நடத்த 2016-ல் சிலருக்கு உரிமம் வழங்கப்பட்டது.

கல் குவாரிக்கு உரிமம் வழங்குவதாக இருந்தால் அந்த இடத்திலிருந்து 300 மீட்டர் தூரத்துக்கு குடியிருப்புகள், கோயில்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், நீர்நிலைகள் இருக்கக்கூடாது என்பது விதி. இதை மீறி சிலருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, கல்குளம் பகுதியில் இயங்கி வரும் சட்டவிரோத கல்குவாரிக்கு தடை விதிக்க வேண்டும், குவாரி உரிமம் பெறத் தவறானஅறிக்கை அளித்த அதிகாரிகள் மீதும், போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்த கருங்கல் காவல் ஆய்வாளர் மீதும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப் பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், அனுமதியில்லாமல் இயங்கிய கல் குவாரிகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், குமரி மாவட்டத்தில் விதிகளை மீறி கல் மற்றும் கிரானைட் குவாரிகளுக்கு அனுமதி வழங்கியது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்.

குவாரிக்கு அனுமதி வழங்கிய பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். குவாரியால் சேதமடைந்த மலைப்பகுதியை பழைய நிலைக்கு கொண்டு வருவது தொடர்பாகவும், குவாரி உரிமம் வழங்குவதில் முறைகேடுகளை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக்குழு தலைவர் அறிக்கை தாக்கல் செய்ய வேண் டும் என உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x