Last Updated : 21 Feb, 2021 10:14 AM

 

Published : 21 Feb 2021 10:14 AM
Last Updated : 21 Feb 2021 10:14 AM

சத்குருவை சந்தித்த பிறகு டெல்லி பயணம்: புதுச்சேரியிலிருந்து இன்று கோவை புறப்படுகிறார் கிரண்பேடி

புதுச்சேரி

பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகும் புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் தங்கியிருக்கும் கிரண்பேடி இன்று மதியம் கோவை புறப்படுகிறார். சத்குருவை சந்தித்த பிறகு டெல்லி செல்ல உள்ளதாக தெரிவித்து ‌உள்ளார்.

சாலைகளில் தடுப்பு, துணைநிலை ஆளுநருக்கு ஐந்து அடுக்குப் பாதுகாப்பு, மக்கள் நலத்திட்டப் பணிகளில் சுணக்கம் என புதுச்சேரி மக்களுக்கு மத்திய அரசு மீது கடும் அதிருப்தி ஏற்பட்ட சூழலில் கிரண்பேடி கடந்த செவ்வாய்க்கிழமை அதிரடியாக நீக்கப்பட்டார். புதிய துணைநிலைஆளுநராகத் தமிழிசை கடந்த வியாழன் பொறுப்பு ஏற்றார். 40 நாட்களுக்கு முன்பு புதுச்சேரி நகரப்பகுதி சாலைகளை மூடிப் போடப்பட்ட சாலைத்தடுப்புகள் அனைத்தும் புதிய ஆளுநர் தமிழிசை உத்தரவால் அகற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து கிரண்பேடிக்குப் போடப்பட்ட ஐந்து அடுக்குப் பாதுகாப்பு முடிவுக்கு வந்தது.

40 நாட்களாகப் புதுச்சேரியில் இருந்து ஆளுநர் மாளிகை முன்பு ஆயுதங்களுடன் பாதுகாப்புப் பணியில் இருந்த துணை ராணுவத்தினரும் புதுச்சேரியிலிருந்து புறப்பட்டனர். அதே நேரத்தில் துணைநிலை ஆளுநர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு தமிழிசை பொறுப்பு ஏற்றும் தொடர்ந்து ஆளுநர் மாளிகையிலேயே கிரண்பேடி தங்கியிருந்தார்.

இதுவரை பதவியிலிருந்து நீக்கப்பட்டாலோ, வேறு இடத்துக்கு மாற்றப்பட்டாலோ புதிய ஆளுநர் பொறுப்பு ஏற்பதற்கு முன்பாகவே பழைய ஆளுநர் புறப்பட்டுச் சென்றுவிடுவது மரபு. காவலர் மரியாதையை ஏற்று, புதிய ஆளுநர் பதவியேற்புக்குப் பிறகும் ஆளுநர் மாளிகையிலேயே கிரண்பேடி தங்கியுள்ளது பலவித சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இச்சூழலில் இன்று வாட்ஸ் அப்பில் கிரண்பேடி கூறுகையில், "பயணத்துக்கு பயண பைகளை எடுத்து வைத்து தயாராக ஆளுநர் மாளிகையில் 3 நாட்கள் தங்க அனுமதி தந்த தமிழிசைக்கு நன்றி. கோவை சென்று சத்குருவை சந்தித்த பிறகு டெல்லி புறப்படுவேன்" என்று குறிப்பிட்டு உள்ளார். மேலும் இன்று மதியம் கோவைக்கு கிரண்பேடி புறப்பட்டு செல்வதாக ஆளுநர் மாளிகை தரப்பில் குறிப்பிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x