Published : 20 Feb 2021 03:16 AM
Last Updated : 20 Feb 2021 03:16 AM

உயர் நீதிமன்ற உத்தரவுக்கு அடித்தளமிட்ட ‘இந்து தமிழ்’: நூலகங்கள் முழு நேரமும் செயல்பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

பள்ளி, கல்லூரிகளைத் தாண்டி சமூகத்தின் ஆக்கத்துக்கும், வளர்ச்சிக்கும் நூலகங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. அனைத்து வகைஅரசுப் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கு நூலகங்கள் மிகப்பெரிய உதவியாக இருக்கின்றன.

அத்தகைய நூலகங்கள், கரோனாவுக்குப் பிறகு இன்னும் முழுமையாகச் செயல்படாமல் உள்ளன. நூலக உறுப்பினர்கள் மட்டுமே புத்தகங்களை எடுத்து வீடுகளுக்குச்சென்று படிக்க அனுமதிக்கப்படுகின்றனர். நாளிதழ்கள் பிரிவு, புத்தகங்களை எடுத்துப் படிக்கும் வாசிப்புப் பிரிவு இன்னும் எந்த நூலகத்திலும் செயல்படவில்லை.

அதனால் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள், நாளிதழ்கள், போட்டித் தேர்வுக்கான புத்தகங்களை எடுத்துப் படிக்க முடியாமல்சிரமம் அடைகின்றனர். தமிழகத்தில்சென்னையில் உள்ள கன்னிமாரா நூலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம் தவிர 32 மாவட்ட மையநூலகங்கள், 1,926 கிளை நூலகங்கள், 14 நடமாடும் நூலகங்கள், 1,915 கிராமப்புற நூலகங்கள், 745 பகுதி நேர நூலகங்கள் உள்ளன.

இதில், மாவட்ட மைய நூலகங்கள் காலை 8 மணி முதல் இரவு 8மணி வரை செயல்படும். ஆனால்,கரோனாவுக்குப் பிறகு கடந்த செப்டம்பர் மாதம் முதல் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையே செயல்படுகின்றன. அதுவும், உறுப்பினர்கள் புத்தகத்தை எடுத்துச் செல்வதற்காகவும், வீட்டிலிருந்து புத்தகத்தை எடுத்து வருவோர் அமர்ந்து படிப்பதற்காகவும் மட்டுமே திறந்து வைக்கப்பட்டுள்ளன.

அதனால், போட்டித் தேர்வுக்குத்தயாராகும் மாணவர்கள், பணம்கொடுத்து நாளிதழ்கள், புத்தகங்களை வாங்கிப் படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழில் பிப்.15-ம்தேதி விரிவான தலையங்கம் வெளியிடப்பட்டிருந்தது. அடுத்த 2 நாட்களில் இந்தச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு நேற்று முன்தினம் மதுரை தத்தனேரியைச் சேர்ந்த சவுந்தர்யா, உயர் நீதிமன்றக் கிளையில் நூலகங்களைத் திறக்க வழக்குத் தொடர்ந்தார்.

நீதிமன்றம் 4 வாரங்களுக்குள் அனைத்து நூலகங்களையும் முழுமையாகத் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கை நடத்திய வழக்கறிஞர் அழகுமணி கூறியதாவது:

நூலகங்கள் முழுமையாகச் செயல்படாததால் வாசிப்புப் பழக்கமே கைவிட்டுப் போய்விடும் என்றஅச்சம் ஏற்பட்டுள்ளது. வசதி படைத்தோர் விரும்பும் புத்தகங்களையும் விலைக்கு வாங்கி தங்கள் அறிவைபெருக்கிக் கொள்வார்கள். ஆனால்,சொற்ப ஊதியம் பெறும் நடுத்தர மக்கள், தொழிலாளர்கள், படித்துவிட்டு போட்டித் தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்கள், மாணவர்கள், இன்றளவும் அன்றாட நாளிதழ்கள் வாசிப்புக்கும், புத்தக வாசிப்புக்கும் அரசு நூலகங்களையே நம்பியுள்ளனர்.

காலையில் எழுந்து டீ, காபி குடிப்பதுபோல நூலகங்களுக்குச் செல்வதும் பெரும்பாலான மக்களுடைய அன்றாடப் பழக்க வழக்கமாக இருந்தது. அன்றாடம் வேலைக்குச் செல்லும் சராசரி மக்கள்கூட காலை அல்லது மாலையில் நேரம் கிடைக்கும்போது அருகில் உள்ள நூலகங்களுக்குச் சென்று நாளிதழ்கள் வாசிப்பதை பழக்கமாகக் கொண்டுள்ளனர்.

கரோனாவுக்கு பிறகு நூலகங்கள் முழுமையாகத் திறக்கப்படாததால் வாசிப்பைக் கைவிட்டுள்ளனர். பஸ், ரயில்களில் மட்டுமல்லாது திரையரங்கு போன்ற கேளிக்கை நிகழ்வுகளுக்கும் 100 சதவீதம் இருக்கைகளில் அமர அனுமதிக்கப்பட்ட நிலையில் அறிவை வளர்க்கக்கூடிய நூலகங்கள் மட்டும் முழுமையாகச் செயல்படாமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார்.

மாவட்ட மைய நூலக அதிகாரிஒருவரிடம் கேட்டபோது, ‘‘நகர்ப்புறநூலகங்களைப்போல் கிராமப்புறநூலகங்களும், பகுதி நேர நூலகங்களும் செப்.1 முதலே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், அதன் இயங்கும் நேரம்குறைக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் புத்தகத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம். நூலகங்களில் நாளிதழ்கள், புத்தகங்கள் எடுத்து அமர்ந்து படிக்க அனுமதியில்லை.

போட்டித் தேர்வர்களுக்கு மட்டும் விதிவிலக்காக வீட்டில் இருந்துவரும் புத்தகங்களை அனுமதித்துள்ளோம். கிளை நூலகங்கள், கிராமப்புற நூலகங்கள், பகுதி நேர நூல கங்கள் தினமும் 3.30 மணி நேரம்செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. முழுமையாகச் செயல்படவில்லை.

உயர் நீதிமன்ற உத்தரவால் மீண்டும் முன்புபோல் நூலகங்களும், அதன் அனைத்துப் பிரிவுகளும் முழுமையாகச் செயல்படஏற்பாடுகள் தொடங்கியிருக்கின் றன’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x