Published : 16 Feb 2021 03:12 AM
Last Updated : 16 Feb 2021 03:12 AM

தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு தடுப்பூசி: சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு கரோனா தடுப்பூசி போடப்படும் என்று சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார்.

இந்தியாவில் கரோனா தொற்று பரவலை தடுக்க கோவேக்ஸின், கோவிஷீல்டு தடுப்பூசி போடும் பணி கடந்த மாதம் 16-ம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் அரசு, தனியார் மையங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கும் அடுத்த கட்டமாக காவல், உள்ளாட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 2-ம் தவணையாக தடுப்பூசி போடும் பணி கடந்த13-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அன்றைய தினம், கடந்த மாதம் 16-ம் தேதி முதல் தவணையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு 2-ம் தவணை தடுப்பூசி போடப்பட்டது.

கடந்த மாதம் 17-ம் தேதி திருச்சிஅரசு தலைமை மருத்துவமனையில் முதல் தவணையாக கோவேக்ஸின் தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், நேற்று சென்னை அரசு பொது மருத்துவமனையில் 2-ம் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டார். மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, மருத்துவமனை டீன் தேரணிராஜன் உடன் இருந்தனர். அப்போது ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

தடுப்பூசி போட்டுக் கொள்வதில் தொடக்கத்தில் இருந்த அச்சம்,தயக்கம் இப்போது இல்லை. சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் காவல், உள்ளாட்சி உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் ஆர்வமாக வந்து தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். தற்போதுஉள்ள 628 தடுப்பூசி மையங்களை1,000 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளை முன்களப்பணியாளர்களாக கருதி, அவர்களுக்கு தடுப்பூசி போடப்படும்.

‘கரோனா தொற்று குறைந்து வருகிறது. தடுப்பூசி போட வேண்டாம்’ என்று யாரும் நினைக்கக் கூடாது. தடுப்பூசி மிகவும் முக்கியமானது. தடுப்பூசி குறித்து சமூகவலைதளங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். வதந்திபரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். டெங்குவின் தாக்கம் இருப்பதால் வீடுகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீரை மூடி வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x