Published : 13 Feb 2021 11:18 AM
Last Updated : 13 Feb 2021 11:18 AM

டெல்டா விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் இளங்கீரன் கைது; அதிமுக ஆட்சியின் அராஜகம்: மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

நியாயமான கோரிக்கைகளை முன்வைத்துப் போராடிய காவிரி டெல்டா விவசாய சங்கங்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இளங்கீரனை அடித்து - இழுத்துச் சென்று அராஜகமாகக் கைது செய்துள்ள அதிமுக ஆட்சிக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள விவரம்:

‘‘திருச்சி - சிதம்பரம் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்காக வீராநந்தபுரம் கிராமத்தில் உள்ள வீடுகளை இடிக்க வந்த அதிகாரிகளிடம் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்துப் போராடிய காவிரி டெல்டா விவசாய சங்கங்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இளங்கீரனை அடித்து - இழுத்துச் சென்று அராஜகமாகக் கைது செய்துள்ள அதிமுக ஆட்சிக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

"விவசாயி" என்று வேடம் போட்டு, நகர்வலம் வந்து கொண்டே - தனக்குக் கீழ் உள்ள காவல்துறையை விட்டு விவசாய சங்கத் தலைவரை அராஜகமாகக் கைது செய்திருக்கும் பழனிசாமி - மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதித்துள்ளார்.

"மனிதாபிமானம் கிலோ என்ன விலை" என்று விவசாயிகளிடம் கேட்கும் பழனிசாமி, 'என்னை வந்து பார்த்து விவசாயிகள் கடன் தள்ளுபடிக்கு நன்றி தெரிவித்தார்' என்பதை உள்நோக்கமாக வைத்து - இளங்கீரன் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப் போட்டு மனித நேயமற்ற முறையில் கைது செய்திருப்பது காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை.

விவசாயிக்கு ஒரு கையில் "கடன் தள்ளுபடி அறிவிப்பு" இன்னொரு கையில் கடுமையாகத் தாக்கி "கைவிலங்கு" போடுவது - என்ற முதல்வர் பழனிசாமியின் வேடம் இதோ கலைந்து விட்டது!

அதிகார வெறி தலைக்கேறுவதால் படுதோல்வி அடையப் போவது முதல்வர் பழனிசாமிதானே தவிர; போராடும் விவசாயிகள் அல்ல.’’
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x