Published : 28 Jan 2021 07:17 AM
Last Updated : 28 Jan 2021 07:17 AM

முஸ்லிம்களுக்கு வட்டியில்லா கடன் எனக்கூறி மோசடி: 350 கிலோ நகைகளை அடகு வைத்து ரூ.50 கோடி சுருட்டிய ரூபி ஜுவல்லர்ஸ்; 43 இடங்களில் சொத்துகள் வாங்கி குவித்ததாக தகவல்

சென்னை மேற்கு மாம்பலத்தில் ரூபிராயல் ஜுவல்லர்ஸ் அண்ட் பேங்கர்ஸ் உள்ளது. சையத் ஹிப்சார் மற்றும் அவரது மகன்களான ரகுமான், அனிஷ் ஆகியோர் கடந்த 10 ஆண்டுகளாக இந்த நிறுவனத்தை நடத்தி வந்தனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பாக,இஸ்லாமிய சட்டப்படி நகைகளுக்கு வட்டியில்லாமல் கடன் தருவதாக அறிவித்தனர். அந்தக் கடனும்முஸ்லிம்களுக்கு மட்டும்தான் அளிக்கப்படும் என்றும் கூறியிருந்தனர். அந்த அறிவிப்பை நம்பி தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் முஸ்லிம்கள் தங்கள் நகைகளை இந்த நிறுவனத்தில் அடகு வைத்துள்ளனர்.

இந்நிலையில், கடையின் உரிமையாளர் ரஹ்மான் ஹிப்சார், சென்னை உயர் நீதிமன்றத்தில் தனது நிறுவனம் திவாலானதாக 2019-ம் ஆண்டு தொடக்கத்தில் மஞ்சள் அறிக்கை அளித்தார். இதனை அடுத்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஏப்ரல்29-ம் தேதி ரூபி ராயல் ஜுவல்லர்ஸ் கடைக்கு சீல் வைக்கப்பட்டது. இந்தத் தகவல் அறிந்த வாடிக்கையாளர்கள், கடை முன்பு குவியத் தொடங்கினர். அப்போதுதான் கடை உரிமையாளர்களும் தலைமறைவானது தெரியவந்தது.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகாரளித்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில், கடை திவாலாகவில்லை என்பதும் நிறுவன உரிமையாளர்கள் நகைகள், பணத்துடன் தலைமறைவானதும் தெரியவந்தது.

பின்னர் இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட, தலைமறைவாக இருந்த ரூபி ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகிகள் சையது ரகுமான், அன்சுர் ரகுமான் மற்றும் ஊழியர்களான ரிகானா, சஜிதா, ஷஹீனா என 5 பேரை கடந்த 25-ம் தேதி கைது செய்தனர். கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் மேலும் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.

முஸ்லிம்களிடம் வட்டியில்லா நகைக்கடன் எனக்கூறி வாங்கப்பட்ட 500 கிலோ நகைகளில், 350 கிலோ நகைகளை, சென்னையில் உள்ள பிரபல அடகு கடை, ஒருவங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனம் ஆகியவற்றில் அதிகபணத்துக்கு அடகு வைத்துள்ளனர். அதில் கிடைத்த ரூ.50 கோடிபணத்துடன் ரூபி ஜுவல்லரி உரிமையாளர்கள் தலைமறைவாகியுள்ளனர். மேலும், 43 இடங்களில்ரூபி ஜுவல்லர்ஸ் உரிமையாளர்கள் சொத்துக்கள் வாங்கி வைத்திருப்பதையும் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். மேலும், விசாரணை நடத்த வேண்டி இருப்பதால், ரூபி ஜுவல்லர்ஸ் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x