Last Updated : 22 Jan, 2021 07:02 PM

 

Published : 22 Jan 2021 07:02 PM
Last Updated : 22 Jan 2021 07:02 PM

மதுரையில் காய்ச்சலால் 7 வயது சிறுவன் மரணம்: டெங்கு பாதித்ததாக பெற்றோர், உறவினர்கள் புகார்

மதுரையில் 7 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், அச்சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் பாதித்ததாக பெற்றோர், உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.

இதனால், சிறுவன் வசித்த குடியிருப்புப் பகுதியில் சுகாதாரத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

மதுரை எஸ்.ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சத்திய பிரியா (40). இவரது மூத்த மகன் மிருத்தின் ஜெயன் (9). இரண்டாவது மகன் திருமலேஷ் (7). இருவருக்கும் கடந்த இரு தினத்துக்கு முன்பு தொடர் காய்ச்சல் இருந்தது.

டெங்கு காய்சலுக்கான அறிகுறி தென்பட்ட நிலையில், மூத்த மகனை அரசு மருத்துவமனையிலும், இளைய மகன் திருமலேஷை மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்கென அனுமதித்தனர்.

இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட திருமலேஷ் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். அவர், டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்திருப்பதாக அவரது பெற்றோர், உறவினர்கள் புகார் எழுப்புகின்றனர்.

சிறுவன் உயிரிழப்பு குடும்பத்தினர் மற்றும் உறவினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கரோனா தொற்று பரவல் சற்று ஓய்ந்திருக்கும் சூழலில் சிறுவன் காய்ச்சலில் இறந்ததால், மதுரை ஆலங்குளம் பகுதியில் டெங்கு அச்சம் மக்கள் மத்தியில் கூடுதல் பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது என அப்பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள், "மதுரை மாவட்டத்தில் கடந்த அக்டோபர் முதலே டெங்கு பரவலைத் தடுக்க, சுகாதாரத்துறை நடவடிக் கை எடுத்தாலும், மாவட்டத்தில் இது வரையிலும் சுமார் 40க்கும் மேற் பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.

இப்போது எங்கள் பகுதியில் ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளார். அது எங்களுக்கு மேலும் அச்சத்தைக் கூட்டுகிறது.

எனவே, சுகாதாரத்துறையினர் வார்டு வாரியாக கண்காணிக்க வேண்டும். மேலும், காய்ச்சல் பரவாமல் இருக்க, மாநகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்கவேண்டும்" எனக் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கிடையில், ஆலங்குளம் பகுதியில் சுகாதாரத்துறையின் பாதிக்கப்பட்ட சிறுவன் வீடு இருக்கும் பகுதியில் இன்று ஆய்வு செய்தனர். காலியிடங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை அப்புறப்படுத்தல், குப்பைகளை அகற்றுவது போன்ற நடவடிக்கையை எடுத்தனர். வீடுகளை சுற்றிலும் சுத்தமாக வைத்திருக்க மக்களை அறிவுறுத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x