Published : 07 Jan 2021 03:01 PM
Last Updated : 07 Jan 2021 03:01 PM

திரையரங்குகளில் 100% இருக்கை அனுமதியை எதிர்த்து மனு: அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

திரையரங்குகளில் 100% இருக்கைக்கு அனுமதி அளித்த தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த பொதுநல மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு மறுத்துவிட்டது.

தமிழகத்தின் கரோனா நிலவரம் குறித்து ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் பழனிசாமி கடந்த டிச.31-ம் தேதி மீண்டும் ஒரு மாதம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டார். அவரது அறிவிப்பில் ஏற்கெனவே நவ.10 முதல் அறிவிக்கப்பட்டிருந்த திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் இயங்கலாம் என்ற அறிவிப்பை அப்படியே கடைப்பிடிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த 8 மாத காலமாக திரையரங்கில் படம் வெளியிடாததால் பலத்த இழப்பை திரைத்துறை சந்தித்து வருவதால் 100% இருக்கைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் திரைத்துறையினர் கோரிக்கை வைத்தனர்.

நடிகர் விஜய், முதல்வர் பழனிசாமியைச் சந்தித்தார். அப்போது அவரும் இதே கோரிக்கையை வைத்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுடன், உரிய பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடித்து இயங்க அனுமதி அளித்து, முன் தேதியிட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இந்த அரசாணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்து அதன் செயலாளர் அஜய் பல்லா தமிழக தலைமைச் செயலாளருக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

“தமிழக அரசு 2021, ஜனவரி 4-ம் தேதி பிறப்பித்த உத்தரவின்படி, உரிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றித் திரையரங்குகளில் 100 சதவீதம் இருக்கையுடன் இயங்கலாம் என அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணை மத்திய அரசின் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் விதிமுறைகளை நீர்த்துப்போகச் செய்யும் விதமாக இருக்கிறது.

ஆதலால், தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005, விதிமுறைகள் எந்தவிதத்திலும் மீறக்கூடாது, நீர்த்துப்போகச் செய்யும் விதத்தில் இருக்கக் கூடாது. அதை அப்படியே செயல்படுத்த வேண்டும்” என கடிதத்தில் வலியுறுத்தியிருந்தார்.

மத்திய அரசின் கடிதத்தைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் கடம்பூர் ராஜு பதிலளித்துள்ளார்.

100% இருக்கை அனுமதி விவகாரத்தை அரசு அமைத்துள்ள 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் குழுவின் தலைவர் பிரதீப் கவுர் கடுமையாகக் கண்டித்துள்ளார். இதேபோன்று மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பலரும் கண்டித்து முடிவை மாற்றச்சொல்லி கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனாலும், தமிழக அரசு இதுவரை ரத்து அறிவிப்பை வெளியிடவில்லை.

இந்நிலையில் அரசின் இந்த முடிவை எதிர்த்து வழக்கறிஞர் பிரபு நேற்று பொதுநல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பாக தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று மதியம் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள வேண்டுமென முறையீடு செய்யப்பட்டது. அப்போது அதை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x