ஸ்ரீரங்கம் கோயிலில் விழாக்கள், பண்டிகைகளை எப்படி நடத்துவது?- அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
Updated on
1 min read

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில், வரும் ஜூலை மாதம் வரையில் நடத்த வேண்டிய விழாக்கள், பண்டிகைகள் எப்படி நடத்தப்பட உள்ளன என்பது குறித்து, மதத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா பரவல் காரணமாக கோயில்கள் மூடப்பட்டதால், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் விழாக்கள், பண்டிகைகளை நடத்துவது குறித்து, மதத் தலைவர்கள் அடங்கிய குழுவை அமைத்து முடிவெடுக்கக் கோரி, திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் இன்று (ஜன.06) விசாரணைக்கு வந்தபோது, மத விவகாரங்களில் தலையிட அரசுக்கு உரிமையில்லை எனவும், ஆகம விதிகளின்படி விழாக்களை நடத்த வேண்டும் எனவும் மனுதாரர் ரங்கராஜன் வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, மத உரிமை, பொதுநலனை விட வாழ்வுரிமை உயர்ந்தது எனவும், வாழ்வுரிமை முக்கியமானது எனவும், வாழ்வுரிமையைக் கருதி அரசு எடுக்கும் நடவடிக்கைகளில் தலையிட முடியாது எனவும் தெரிவித்தார்.

அதேசமயம், வரும் ஜூலை வரை ஸ்ரீரங்கம் கோயிலில் நடக்க உள்ள விழாக்கள், பண்டிகைகளை எப்படி நடத்துவது என்பது குறித்து, மதத் தலைவர்களுடன் கலந்து பேசி, ஆறு வாரங்களுக்குள் அறிக்கை அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், பொது சுகாதாரம் மற்றும் கரோனா தடுப்பு விதிகளில் எந்த சமரசமும் செய்துகொள்ளக் கூடாது எனத் திட்டவட்டமாக அறிவுறுத்தி, வழக்கின் விசாரணையை பிப்ரவரி மாதத்துக்குத் தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in