Published : 04 Jan 2021 01:18 PM
Last Updated : 04 Jan 2021 01:18 PM

திரையரங்குகள் 100% இருக்கையுடன் இயங்க அனுமதி: அரசாணை வெளியீடு

சென்னை

திரையரங்குகளில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி என சமீபத்தில் முதல்வர் அறிவித்திருந்த நிலையில், இன்று இடைக்கால அறிவிப்பாக 100% இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவத் தொடங்கிய நிலையில் இந்தியாவிலும் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பொதுமக்கள் வீட்டில் முடங்கினர். பொதுப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

பொதுமக்கள் கூடும் நிகழ்ச்சிகள், மத வழிபாடுகள், பொதுக் கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள், பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. அவசியமின்றி பொதுமக்கள் வெளியில் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டது.

இந்தியாவில் கரோனா பாதிப்பு ஒரு கோடியைக் கடந்தது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு எட்டு லட்சத்தைக் கடந்தது. அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக கரோனா தொற்று பெரும் அளவில் குறைக்கப்பட்டது.

உலகம் முழுவதும் கரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் இங்கிலாந்தில் திடீரென உருமாற்றம் பெற்ற கரோனா வைரஸ் காரணமாக மீண்டும் தொற்று வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக இங்கிலாந்தில் மீண்டும் முழு அடைப்பு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் இவை குறித்து ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் பழனிசாமி கடந்த டிச.31-ம் தேதி மீண்டும் ஒரு மாதம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டார். அவரது அறிவிப்பில் ஏற்கெனவே நவ.10 முதல் அறிவிக்கப்பட்டிருந்த திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் இயங்கலாம் என்ற அறிவிப்பை அப்படியே கடைப்பிடிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

முதல்வர் உத்தரவின்படி, “31.12.2020 முடிய தமிழ்நாடு முழுவதும் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளில் கீழ்க்கண்ட தளர்வுகளுடன், 31.1.2021 நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டுப் பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளுடன் கீழ்க்கண்ட பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது :

1) நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, உள் அரங்கங்களில் மட்டும், அதிகபட்சம் 50 சதவிகித இருக்கைகள் அல்லது அதிகபட்சமாக 200 நபர்கள் பங்கேற்கும் வண்ணம் சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார, கல்வி மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த 1.1.2021 முதல் தொடர்ந்து அனுமதிக்கப்படுகிறது. இக்கூட்டங்களுக்குச் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும், சென்னை மாநகராட்சியில் காவல் துறை ஆணையரிடமும் உரிய முன் அனுமதி பெறுவது அவசியம்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் திரைத்துறையினர் ஏமாற்றம் அடைந்தனர். கடந்த 8 மாத காலமாக திரையரங்கில் படம் வெளியிடாததால் பலத்த இழப்பை திரைத்துறை சந்தித்து வருவதால் 100% இருக்கைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தனர். அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் கோரிக்கை வைத்தனர்.

நடிகர் விஜய் முதல்வர் பழனிசாமியைச் சந்தித்தார். அப்போது அவரும் இதே கோரிக்கையை வைத்ததாகத் தெரிகிறது. நடிகர் விஜய்யின் 'மாஸ்டர்' படமும், சிம்புவின் 'ஈஸ்வரன்' படமும் பொங்கலுக்கு வெளிவருவதால் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். இதனால் திரையுலகினர் கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் இன்று தமிழக அரசு திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் உரிய பாதுகாப்பு நடைமுறைகளைத் திரையரங்குகள் கடைப்பிடித்து 100% இருக்கைகளுடன் இயங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அரசாணையைத் தலைமைச் செயலாளர் சண்முகம் பிறப்பித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x