Published : 17 Dec 2020 03:17 AM
Last Updated : 17 Dec 2020 03:17 AM

மூன்று பேர் உயிரிழப்புக்கு காரணமான ‘ஒற்றை கொம்பன்’ யானையை கண்டறிந்த வனத்துறையினர்: மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயற்சி

பந்தலூர்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே அடுத்தடுத்து மூன்று பேரை கொன்ற யானையைபிடிக்க முடிவு செய்த வனத் துறையினர்,இதற்காக முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து விஜய், பொம்மன், ஆனைமலை புலிகள்காப்பகத்தில் இருந்து கலீல் ஆகிய மூன்று கும்கி யானைகளை கொளப்பள்ளி பகுதிக்கு வரவழைத்தனர். கால்நடை மருத்துவர்கள் மனோகரன், சுகுமாரன் ஆகியோர் தலைமையில் மருத்துவக் குழுவினரும் சம்பவ இடத்தில் முகாமிட்டுள்ளனர்.

முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து யானையைத் தேடுதல், பிடித்தல் உள்ளிட்ட பணிகளில் பயிற்சி பெற்ற வனப் பணியாளர்கள்அடங்கிய 3 குழுக்கள், யானையை கண்காணித்து அடையாளப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இரண்டு ட்ரோன் கேமராக்கள் மூலமும் யானையின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஆட்கொல்லி யானை இருக்குமிடம் தெரியவந்ததால், அதை சுற்றி வளைத்து பிடிக்க வனத் துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.

இதுகுறித்து வனத் துறையினர் கூறும்போது, ‘‘காட்டு யானை மஸ்து (இனப்பெருக்க காலத்தில் யானைகளுக்கு பாலுணர்வு மிகுவதால் ஏற்படும் தீவிர நிலை) ஏற்பட்ட நிலையில், பெண் யானைகளுடன் சேரம்பாடி அடுத்துள்ள கோஸ்லாண்ட் சப்பந்தோடு பகுதியில் உள்ளது. கும்கி யானைகள் தயார் நிலையில் உள்ளன.

கால்நடை மருத்துவர்கள் துப்பாக்கிமூலம்யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். ஆனால்,அந்த யானையுடன், கூட்டமாக பிற யானைகளும் உள்ளதால் அதை நெருங்க முடியவில்லை. இருள் சூழ்ந்ததால், யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். நாளை (இன்று) மீண்டும் யானையை பிடிக்கும் பணி தொடரும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x