Last Updated : 16 Dec, 2020 07:01 PM

 

Published : 16 Dec 2020 07:01 PM
Last Updated : 16 Dec 2020 07:01 PM

ஆட்சியில் இருப்பவர்கள் சோம்பேறிகளாக உள்ளனர்: குமரியில் கமல் குற்றச்சாட்டு

ஆட்சியில் இருப்பவர்கள் சோம்பேறிகளாக உள்ளனர் என மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் குற்றம் சாட்டினார்.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று வந்த கமல்ஹாசனுக்கு கட்சி நிர்வாகிகள் சார்பில் காவல்கிணறு எல்லையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மயிலாடி, சுசீந்திரத்தில் பிரச்சாரம் செய்வதாக இருந்தது. ஆனால், அவர் வருகைக்குத் தாமதமானதால் அங்கு திரண்டிருந்த ரசிகர்கள், மற்றும் கட்சியினர் ஏமாற்றம் அடைந்தனர்.

பின்னர் நாகர்கோவிலில் ஆசாரிபள்ளம் சாலையில் உள்ள அரங்கில் இளைஞரணி, மகளிரணி, மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் பேசுகையில், "எம்.ஜி.ஆர். இருக்கும்போது நான் அரசியலுக்கு வரவேண்டிய தேவை இல்லை. இப்போது வரவேண்டிய நிர்பந்தம் உள்ளது. இரட்டை இலையை ஓ.பி.எஸ்., இபிஎஸ் ஆகியோர விருந்திற்காகப் போட்டதாக நினைக்கிறார்கள். எம்.ஜி.ஆரை நான் கையில் எடுக்கவில்லை. அவர்தான் என்னைக் கையில் எடுத்தார்.

என்னை முழுநேர அரசியல்வாதியா? எனக் கேட்கிறார்கள். யாரும் முழுநேர அரசியல்வாதியாக இருக்கக் கூடாது என்பதுதான் எனது கருத்து. அரசியலில் காமராஜர், கக்கன் போன்றோர் இருந்தார்கள். அவர்களை மதிக்காத சோம்பேறிகள் கூட்டத்தில் நான் சேரமாட்டேன். வேலை செய்யாமல் சம்பளம் வாங்குவோர்கள் சோம்பேறிகள். ஆட்சியில் இருப்பவர்கள் சோம்பேறிகளாக உள்ளனர். கடமையைச் செய்ய வந்த நான் காசுக்காக வரவில்லை. எனது கடமையைச் செய்ய விடுங்கள். இதற்கு உங்கள் உதவி வேண்டும்.

தற்போது ஏழரை கோடி மக்களை 234 பேர் சூறையாடிக் கொண்டிருக்கின்றனர். விவசாயத்தில் நாற்று நடுவது முதல் களை எடுப்பது வரை பெண்கள் செய்கின்றனர். பெண்களுக்கு உரிய உரிமையை எமது அரசு கொடுக்கும். விவசாயிகளுக்கு அளிக்கும் சலுகைகளைப் பெண் விவசாயிகளுக்கும் அளிப்போம். இல்லத்தரசிகளுக்கு ஊதியம் கொடுக்க வேண்டும். வீட்டில் ஆண்கள் வாங்கும் சம்பளத்தை விட பெண்கள் அதிகம் வாங்கவேண்டும்.

ஆள்பவர்கள் கொள்ளையடிக்காமல் இருந்தால் இரண்டு தமிழகம் அளவிற்கு உள்ளவர்களையும் நாம் காப்பாற்ற முடியும். தமிழகம் தலைநிமிர்வதற்கு மக்கள் நீதி மய்யத்திற்கு வாய்ப்பு அளியுங்கள். ஊர்கூடி தேர் இழுத்தால் நாளை நமதாகும்" என்று கமல் பேசினார்.

இதைத் தொடர்ந்து மாலையில் தக்கலை சந்திப்பில் கமல்ஹாசன் தெருமுனைக் கூட்டத்தில் பேசினார். பின்னர் மார்த்தாண்டத்தில் மக்கள் நீதி மய்யக் கட்சி அலுவலகத்தைத் திறந்து வைத்தார். அதன் பின்னர் தேங்காய்பட்டனம் மீன்பிடித் துறைமுகம் சென்ற அவர், மீனவர்கள், மீனவ சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x