Last Updated : 16 Dec, 2020 06:22 PM

 

Published : 16 Dec 2020 06:22 PM
Last Updated : 16 Dec 2020 06:22 PM

முருகனின் உடல்நிலை சோர்வடைந்ததால் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி

முருகன்: கோப்புப்படம்

வேலூர்

தொடர் உண்ணாவிரதம் இருந்துவரும் முருகனின் உடல்நிலை சோர்வடைந்ததால் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலூர் மத்திய சிறையில் கடந்த 29 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சிறையில் முருகனுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை சிறைத்துறை நிர்வாகம் ரத்து செய்தது.

இதனால், மனமுடைந்த முருகன் கடந்த மாதம் 23-ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார். சிறையில் அவருக்கு வழங்கப்படும் உணவுகளைத் தவிர்த்துவரும் முருகன், பழங்கள், தண்ணீரை மட்டும் எடுத்துக்கொள்கிறார். இருப்பினும், போதிய ஊட்டச்சத்து இல்லாததாலும், தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பதாலும் முருகனின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, சிறைத்துறை மருத்துவர்கள் முருகனுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்தனர். மருத்துவர்கள் ஆலோசனைப்படி முருகனுக்குச் சிறையிலேயே 4 முறை குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. அதே நேரத்தில், முருகனின் உண்ணாவிரதப் போராட்டத்தையும் முடிவுக்குக் கொண்டு வர சிறைத்துறை அதிகாரிகள் தொடர்ந்து முயற்சி எடுத்து வந்தனர்.

இந்நிலையில், 23-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து வரும் முருகனின் உடல்நிலை நேற்று (டிச.15) இரவு மோசடைந்தது.

இதையடுத்து, சிறைத்துறை மருத்துவர்கள் மற்றும் வேலூர் மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் யாஸ்மின் ஆகியோர் முருகனுக்கு மருத்துவப் பரிசோதனை செய்தனர். மருத்துவர்கள் ஆலோசனைப்படி முருகன் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு நேற்றிரவு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதனை செய்த அரசு மருத்துவர்கள், குளுக்கோஸ் மட்டும் போதாது, கட்டாயமாக உணவு எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர். அரசு மருத்துவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்காததால் முருகன் மீண்டும் சிறைக்குத் திரும்பினார்.

இந்நிலையில், சிறைக்குத் திரும்பிய சில மணி நேரங்களில் முருகனின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, இன்று (டிச.16) அதிகாலை முருகன் மீண்டும் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முருகனின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

அதே நேரத்தில், முருகன் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர சிறைத்துறை அதிகாரிகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் முருகன் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x