Published : 14 Dec 2020 02:56 PM
Last Updated : 14 Dec 2020 02:56 PM

மெரினா கடற்கரையில் 900 தள்ளு வண்டி கடைகள் அமைக்கும் பணி: 3 மாதத்தில் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

சென்னை மெரினா கடற்கரையில் அடுத்த மூன்று மாதத்திற்குள் ஏற்கெனவே இருந்த கடைகளை அகற்றிவிட்டு, புதிதாக 900 தள்ளுவண்டி கடைகள் நிறுவப்படுவதை உறுதி செய்ய சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் ஏற்கெனவே இருந்த கடைகளை அகற்றிவிட்டு புதிதாக அமைக்கப்படவுள்ள 900 தள்ளுவண்டி கடைகளுக்கான டெண்டரை இறுதி செய்வது தொடர்பான வழக்கு நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் எம்.எஸ் ரமேஷ் அடங்கிய அமர்வில் விசாரணையில் உள்ளது.

கடந்த முறை இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், 900 தள்ளுவண்டி கடைகள் அமைப்பதற்கான டெண்டரை ஏக்வாட் மற்றும் ஏ.ஐ.ஆர். சிஸ்டம்ஸ் ஆகிய இரு நிறுவனங்களுக்கும் தலா 450 கடைகள் வீதம் பகிர்ந்து அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஏ.ஐ.ஆர். சிஸ்டம்ஸ் சார்பில், உயர்நீதிமன்றம் குறித்த நாட்களின் அடிப்படையில் தங்களால் கடைகளை உரிய நேரத்தில் ஒப்படைக்க முடியாத நிலை உள்ளதால், ஒப்பந்தத்திலிருந்து விலகிக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. ஏக்வாட் நிறுவனம் சார்பில் மூன்று மாதத்தில் 900 தள்ளுவண்டி கடைகளை விநியோகிக்க தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஏக்வாட் நிறுவனத்திற்கே முழுவதுமாக பணிகளை வழங்க உத்தரவிட்டனர். மூன்று மாதத்திற்குள் 900 தள்ளுவண்டி கடைகளையும் சப்ளை செய்ய தவறினால் ஏற்கனவே குறிப்பிட்டபடி அபராதம் விதிக்கலாம் எனவும் தெரிவித்தனர்.

மாநகராட்சி தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில், “புதிய கடைகளை பொறுத்தவரை, ஏற்கனவே மெரினாவில் தொழில் செய்பவர்களுக்கு 60 சதவீதமும், புதிதாக கடை வைக்க விரும்புவர்களுக்கு 40 சதவீதமும் பிரித்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே மெரினாவில் 2 முதல் 3 கடைகளை வைத்திருப்பவர்களை முறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கடைகள் அமைக்க விரும்புபவர்களுக்கான விண்ணப்பம் டிசம்பர் 21-ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. 2021 ஜனவரி 6-ம் தேதி விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டு அதன் பிறகு குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கீடு நடைபெறும்”. என தெரிவிக்கப்பட்டது.

கடைகள் அமைப்பதற்கான அனுமதி வழங்குவதில் வெளிப்படைத் தன்மை பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதிகள், ஏற்கனவே உள்ள கடைகளை அப்புறப்படுத்துவதிலும் உரிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டுமென உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x