Last Updated : 09 Dec, 2020 06:35 PM

 

Published : 09 Dec 2020 06:35 PM
Last Updated : 09 Dec 2020 06:35 PM

நீர் ஆதாரங்களை பாழ்படுத்துவோர் மீது குண்டர் சட்டம்: சட்டத் திருத்தம் கொண்டு வர உயர் நீதிமன்றம் பரிந்துரை

தமிழகத்தில் நீர் ஆதாரங்களைப் பாழ்படுத்துவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்யும் வகையில் உரிய சட்டத்திருத்தம் கொண்டு வர உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பதிவாளர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

அமராவதி ஆறு கரூர், திருப்பூர் மாவட்டங்களில் 282 கிலோ மீட்டர் பயணிக்கிறது. கரூர், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சாயப் பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அமராவதி ஆற்றில் கலப்பதால் ஆறு மாசடைந்து வருகிறது.

இதனால் அமராவதி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்க வந்தது. பதிவாளர் தரப்பில் வழக்கறிஞர் கு.சாமிதுரை வாதிட்டார்.
அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது.

மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில், கரூரில் 435 சாயப்பட்டறைகள் இருந்தது. நீதிமன்ற உத்தரவால் பல சாயப்பட்டறைகள் மூடப்பட்டன. தற்போது 68 ஆலைகள் மட்டுமே உள்ளன.

இதில் அமராவதி ஆற்றிலிருந்து 100 மீட்டருக்குள் 3 ஆலைகள் மட்டுமே உள்ளன. லைகளில் அனைத்து ஆலைகளிலும் சுத்திகரிப்பு மையங்கள் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், அனைத்து உத்தரவுகளும் காகித அளவிலேயே உள்ளன. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஊழலில் திளைக்கிறது. அதிகாரிகள் ஊழல்வாதிகளாக உள்ளனர்.

இந்த 68 ஆலைகளும் கடந்த 5 ஆண்டுகளில் எந்த தவறிலும் ஈடுபடவில்லையா? என கேள்வி எழுப்பினர். தவறு செய்த ஆலைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள், இயற்கை வளங்கள் அனைத்தையும் மாசுபடுத்திவிட்டு நோய்கள் உருவாக நாமே காரணமாக இருந்துவிட்டு புதிது புதிதாக மருத்துவக்கல்லூரிகளை திறப்பதால் என்ன பயன்? என்றனர்.

தொடர்ந்து நீதிபதிகள், இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. நொய்யல் நதி ஏற்கனவே காணாமல்போய்விட்டது.

நீராதாரங்களை மாசுபடுத்துவோர் மீது குண்டர் சட்டம் பாயும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர தமிழக அரசுக்கு பரிந்துரை செய்கிறோம்.
அமராவதி ஆற்றில் இரட்டை வாய்க்கால் பகுதியில் 5 இடங்களில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் நீர் மாதிரி சேகரித்து சென்னை கிங்ஸ் ஆய்வகத்திற்கு அனுப்பி பரிசோதித்து அறிக்கை தாக்கல் வேண்டும்.

தமிழக அரசு விரைவில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். தவறினால் தலைமை செயலர் ஆஜராக உத்தரவிடப்படும். விசாரணை டிச. 17-க்கு ஒத்திவைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x