Last Updated : 09 Dec, 2020 06:27 PM

 

Published : 09 Dec 2020 06:27 PM
Last Updated : 09 Dec 2020 06:27 PM

வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறியை தனி நெறியாக அறிவிக்கக் கோரி வழக்கு: அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவு

வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறியை தனி நெறியாக அறிவிக்கக் கோரிய வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை உத்தங்குடியைச் சேர்ந்த ராமலட்சுமி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் வள்ளலாரின் கொள்கைகள் பெரும்பாலானவர்களால் பின்பற்றப்படுகிறது. வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம் நெறியை பின்பற்றி பல இடங்களில் தர்ம சாலைகள் திறந்து பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. வடலூரில் 1867-ம் ஆண்டு முதல் அணையா அடுப்பு அமைக்கப்பட்டு ஏழைகளுக்கு உணவு வழங்கப்படுகிறது.

வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறியை தனி நெறியாகவும், புதிய மார்க்கமாகவும் அறிவிக்கும் கோரிக்கயை பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக கருத்துகள் பெற உயர் மட்டக்குழு அமைக்கப்படும் என தமிழக அரசு 2019 ஜூலை 31-ல் அறிவித்தது. ஆனால் இதுவரை உயர்மட்டக்குழு அமைக்கவில்லை.

இதை நினைவூட்டி அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறியை தனி நெறியாகவும், புதிய மார்க்கமாகவும் அறிவிப்பது தொடர்பாக கருத்துரைகளை பெற உடனடியாக உயர்மட்ட குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில், மனு தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையர், இணை ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x