Last Updated : 23 Nov, 2020 11:04 AM

 

Published : 23 Nov 2020 11:04 AM
Last Updated : 23 Nov 2020 11:04 AM

புதுச்சேரியில் 3-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்: துறைமுகத்தில் நிறுத்தப்பட்ட விசைப்படகுகள்

வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் காரணமாக புதுச்சேரியில் 3-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடல் சீற்றம் காரணமாக புதுச்சேரியில் மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் ஏராளமான விசைப்படகுகள் தேங்காய் திட்டு துறைமுகப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள நிவர் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடல் சீற்றம் அதிகரித்துக் காணப்படுவதால் புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து பேரிடர் மீட்புக் குழுவினர் புதுச்சேரிக்கு வரவுள்ளனர். இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து புதுச்சேரி துறைமுகப் பகுதியில் ஏராளமான விசைப்படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் வைத்திக்குப்பம், சின்ன வீராம்பட்டினம், நல்லவாடு உள்ளிட்ட மீனவ கிராமங்களில் பாதுகாப்பாக படகுகளை நிறுத்த அரசு அறிவுறுத்தியுள்ளது.

கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. வழக்கமாக 3 அடி அளவிற்கு அலைகள் வீசும். தற்போது அதன் அளவு அதிகரித்துள்ளது. கடலோரப் பகுதியில் நேற்று முதலே பாதுகாப்புப் பணி அதிகரித்துள்ளது.

மீனவர்கள் தரப்பில் விசாரித்தபோது, "புயல் முன்னெச்சரிக்கை காரணமாக புதுச்சேரி விசைப்படகு மீனவர்களுக்கு நேற்று முதல் மீன்வளத்துறை சார்பில் டீசல் வழங்கப்படவில்லை. இதனால் விசைப்படகுகள் தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. கட்டுமரங்கள் அந்தந்த மீனவ 18 மீனவ கிராமங்களில் கரையோரம் பாதுகாப்புடன் நிறுத்தப்பட்டுள்ளன. இரண்டு தினங்களுக்கு முன்பு மீன்வளத்துறை கொடுத்த அறிவிப்பின் காரணமாக கடலுக்குச் சென்ற மீனவர்களில் பெரும்பாலானோர் கரை திரும்பி விட்டனர்" என்று குறிப்பிடுகின்றனர்.

படகுகளுக்குப் பாதுகாப்பு உண்டா?

அதேநேரத்தில் படகுகள் பாதுகாப்பு தொடர்பாக மீனவர்கள் கூறுகையில்," புயல் காரணமாக துறைமுகத்துக்குப் படகுகள் கொண்டு வந்துள்ளோம். துறைமுக முகத்துவாரம் தூர்வாரப்படாததால் அடைந்துள்ளது. கடல் சீற்றத்தின்போது துறைமுகத்தில் வைத்துள்ள படகுகள் சேதம் அடைகின்றன. உண்மையில் கடலில்தான் படகுகளுக்குப் பாதுகாப்பு. துறைமுகம் மோசமாக இருப்பதால் கட்டி வைக்கப்படும் படகுகள் இயற்கைச் சீற்றத்தில் பெரும் அளவில் பாதிக்கப்படும் என்ற அச்சம் உள்ளது" என்று குறிப்பிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x