Published : 09 Oct 2015 10:01 AM
Last Updated : 09 Oct 2015 10:01 AM

சிறார் சீர்திருத்த பள்ளியில் இருந்து 4 சிறுமிகள் தப்பி ஓட்டம்

புரசைவாக்கம் சீர்திருத்த பள்ளியில் இருந்து 4 சிறுமிகள் தப்பி ஓடி விட்டனர்.

சென்னை புரசைவாக்கம் நெடுஞ்சாலை கெல்லீஸில் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி உள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபட்ட 18 வயதுக்கும் குறைவான சிறுவர், சிறுமிகள் சுமார் 300 பேர் இங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 6-ம் தேதி சீர்திருத்த பள்ளியின் கேட்டை உடைத்து 17 சிறுவர்கள் தப்பி சென்று விட்டனர். இதில் 4 பேர் பிடிபட்டனர். மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில், சீர்திருத்த பள்ளியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 4 சிறுமிகள் நேற்று முன்தினம் இரவு தப்பி சென்று விட்டனர். சிறுவர்கள், சிறுமிகளுக்கு என்று இங்கு தனித்தனி வளாகங்கள் உள்ளன. சிறுமிகளுக்கு ஏராளமான தொழில் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. அதுபோன்ற பயிற்சியில் ஈடுபட்டு இருந்த சிறுமிகள்தான் தப்பி சென்று விட்டனர்.

தப்பி ஓடிய சிறுவர்களே இன்னும் பிடிபடாத நிலையில், சிறுமிகளும் தப்பி சென்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தப்பி செல்ல காரணம் என்ன?

குற்றம் செய்த சிறுவர், சிறுமிகள் சுமார் 300 பேர் இருக்கும் சீர்திருத்த பள்ளியில் பாதுகாப்புக்கு ஒரு போலீஸ்காரர்கூட கிடையாது. தொழில் பயிற்சி கொடுப்பவர்கள், ஆசிரியர்கள், சமையல் செய்பவர்கள், சாதாரண காவலாளிகள் என சுமார் 15 பேர் மட்டுமே உள்ளனர். சிறுவர்கள் என்பதால் சிறைச்சாலைகள் போன்று இல்லாமல் சாதாரண அறைகளில் மட்டுமே தங்க வைக்கப்படுகின்றனர். இதனால் 17 வயதை அடைந்த பலர் சாதுர்யமாக தப்பிச் செல்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x