Last Updated : 06 Nov, 2020 06:22 PM

2  

Published : 06 Nov 2020 06:22 PM
Last Updated : 06 Nov 2020 06:22 PM

நூறு நாள் வேலைத் திட்டத்தில் மோசடி: உயர் நீதிமன்றம் அதிருப்தி

மதுரை

நூறு நாள் வேலைத் திட்டத்தில் அதிகாரிகள் நிதி மோசடி செய்கின்றனர். தொழிலாளர்கள் வேலை செய்யாமல் மோசடி செய்கின்றனர் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

திண்டுக்கல், ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த முருகானந்தம், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

''ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் சத்திரப்பட்டியில் 2017 முதல் 2020 வரை நடைபெற்ற நூறு நாள் வேலைத் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டுக்கான சமூகத் தணிக்கை அறிக்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விடக் குறைவான இடங்களிலேயே வேலை நடைபெற்றிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்யாதவர்களுக்கும் அடையாள அட்டை கொடுக்கப்பட்டுப் பணம் வழங்கப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டிற்கு அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர். முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நூறு நாள் வேலைத் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்''.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது.

அப்போது நீதிபதிகள், ''ஊராட்சிப் பகுதிகளில் நடைபெறும் திட்டப் பணிகளில் அதே பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் நூறு நாள் வேலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகத் தொடர்ந்து புகார்கள் வருகின்றன.

இந்தத் திட்டத்தில் அதிகாரிகள் நிதி மோசடியில் ஈடுபடுகின்றனர். தொழிலாளர்கள் வேலை செய்யாமல் மோசடியில் ஈடுபடுகின்றனர். இயந்திரங்களைப் பயன்படுத்தி சில நிமிடங்களில் செய்து முடிக்க வேண்டிய பணிகளைத் தொழிலாளர்களைப் பயன்படுத்தி ஏன் செய்கிறார்கள்?'' என்றனர்.

பின்னர் மனு தொடர்பாகத் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவ. 23ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x