Published : 30 Oct 2015 08:19 AM
Last Updated : 30 Oct 2015 08:19 AM

குரூப்- 4 பணிகளுக்கு நவ.16 முதல் கலந்தாய்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

குரூப்-4 பணிகளுக்கான கலந்தாய்வு நவம்பர் 16-ம் தேதி தொடங்க இருப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு-3) மற்றும் வரித்தண்டலர் (கிரேடு-1), நிலஅளவர், வரைவாளர் ஆகிய பதவிகளில் 4,963 காலியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 21.12.2014 அன்று குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது. தேர்வெழுதியவர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசைப் பட்டியல் கடந்த மே மாதம் 22-ம் தேதி வெளியிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இளநிலை உதவியாளர், நில அளவர், வரைவாளர் ஆகிய பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 15 முதல் ஜூலை 9-ம் தேதி வரையும், தட்டச்சர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 13 முதல் 28-ம் தேதி வரையும், சுருக்கெழுத்தர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரையும் நடைபெற்றன.

இந்த நிலையில், மேற்கண்ட பணிகளுக்கான கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட்டவர்களின் பதிவெண்களையும் கலந்தாய்வு தேதி விவரங்களையும் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிட்டுள்ளது. அதன்படி, இளநிலை உதவியாளர், நில அளவர், வரைவாளர் ஆகிய பணிகளுக்கான கலந்தாய்வு நவம்பர் 16-ம் தேதியும், தட்டச்சர் பணிக்கான கலந்தாய்வு டிசம்பர் 4-ம் தேதியும் தொடங்குகின்றன.

சுருக்கெழுத்தர் பணிக்கான கலந்தாய்வு டிசம்பர் 14-ம் தேதி நடக்கிறது. கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட்டவர்களுக்கு அதுகுறித்து தனித்தனியே தகவல் தெரிவிக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x