Published : 05 Oct 2020 07:17 AM
Last Updated : 05 Oct 2020 07:17 AM
மீன்பிடிக்க கடலுக்குச் செல்லும் மீனவர்கள் அனுமதிச் சீட்டு பெறுவது அவசியம் என்று மீன்வளத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னையில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் விசைப்படகு, ஃபைபர் படகு உள்ளிட்டவற்றின் மூலம் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் அனுமதிச் சீட்டு பெற்று கடலுக்கு செல்வதில்லை. இதனால் எதிர்பாராதவிதமாக, கடலில் விபத்து ஏற்படும்போது மீனவர்களின் முழுமையான விவரங்களை கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, இனிவரும் காலங்களில் அனுமதிச் சீட்டு பெற்று கடலுக்குச் செல்லும்படி மீனவர்களுக்கு மீன்வளத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக, மீன்வளத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ராமநாதபுரம் உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் கடலுக்கு செல்லும் மீனவர்கள் அனுமதிச் சீட்டு பெற்று செல்லும் முறையைப் பின்பற்றி வருகின்றனர். சென்னையில் அதுபோன்ற முறையை மீனவர்கள் கடைபிடிப்பதில்லை. அனுமதி சீட்டு பெற்று செல்லும்போது தொழிலுக்கு செல்லும் மீனவர்களின் விவரம், எந்தப் பகுதியில் மீன்பிடிக்கச் செல்கின்றனர் என்பன உள்ளிட்ட விவரங்கள் பதிவு செய்யப்படும். இதனால், மீனவர்களுக்கு ஏதாவது அவசர உதவி தேவைப்பட்டால் உடனடியாக உதவி செய்ய முடியும்.
எனவே, அனுமதிச் சீட்டு பெற்று கடலுக்குச் செல்வதன் அவசியம் குறித்து மீனவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், கடலுக்குச் செல்லும் படகுகள், மீன்பிடி துறைமுக மேலாண்மை பிரிவு அலுவலகத்தில் அனுமதிச் சீட்டு பெற்ற பின்னரே கடலுக்குச் செல்ல வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT