Last Updated : 07 Sep, 2020 06:00 PM

 

Published : 07 Sep 2020 06:00 PM
Last Updated : 07 Sep 2020 06:00 PM

தென்காசி- திருநெல்வேலி வழித்தடத்தில் அலைமோதும் பயணிகள் கூட்டம்: பேருந்துகளை முழு அளவில் இயக்க கோரிக்கை

தென்காசி

மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து இன்று தொடங்கிய நிலையில் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு வழித்தடங்களில் கூட்டம் அலைமோதியது.

தனிமனித இடைவெளியின்றி பயணிகள் பயணம் செய்வதால், அனைத்து பேருந்துகளையும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த உரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டபோது, பேருந்து போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. பின்னர், அரசுப் பணியாளர்களுக்காக சில வழித்தடங்களில் மட்டும் ஓரிரு பேருந்துகள் இயக்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து மண்டலங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து தொடங்கியது. பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருந்ததாலும், கரோனா தொற்று குறையாத காரணத்தாலும் மீண்டும் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், கடந்த 1-ம் தேதி முதல் மாவட்டங்களுக்குள் 32 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டன. வெளி மாவட்டங்களுக்கு வேலைக்குச் செல்வோருக்கு இதனால் எந்த பயனும் ஏற்படவில்லை.

எனவே, வெளி மாவட்டங்களுக்கும் பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, இன்று முதல் மாவட்டங்களுக்கு இடையேயான அரசுப் பேருந்துகளும், அரசு விரைவுப் பேருந்துகளும் இயங்கத் தொடங்கின.

இதனால், வெளியூர்களுக்கு பல்வேறு தேவைகளுக்காக செல்வோர் மீண்டும் பேருந்து பயணத்துக்கு மாறினர். அனைத்து வழித்தடங்களிலும் பேருந்துகளில் பயணிப்போர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

60 சதவீத பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், பல்வேறு வழித்தடங்களில் பேருந்துகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தென்காசி-திருநெல்வேலி வழித்தடத்தில் வழக்கமான அளவுக்கு பேருந்துகள் இயக்கப்டும் நாட்களிலேயே கூட்டம் அலைமோதும். படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்வார்கள்.

இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்ட பேருந்துகளில் இருக்கைகள் அனைத்தும் தென்காசியிலேயே நிரம்பி, பயணிகள் நின்றுகொண்டும் பயணம் செய்கின்றனர். வழியில் உள்ள ஊர்களில் பேருந்துகளில் மேலும் பயணிகள் கூட்டம் அதிகரிக்கிறது. தனிமனித இடைவெளியின்றி ஆண்களும், பெண்களும் படிக்கட்டுகளில் நின்றுகொண்டும் பயணம் செய்தனர்.

இதுகுறித்து பயணிகள் கூறும்போது, “தென்காசி- திருநெல்வேலி வழித்தடத்தில் 10 நிமிடத்துக்கு ஒரு பேருந்து வந்தாலும் கூட்டம் அதிகமாகவே இருக்கும். தற்போது, நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதால், பேருந்து நிறுத்தங்களில் கூட்டம் சேர்ந்துகொண்டே உள்ளது. அதனால், பேருந்து வரும்போது அனைவரும் முண்டியடித்து ஏறுகின்றனர்.

இடம் கிடைக்காமல் படிக்கட்டுகளில் நின்றுகொண்டும் பயணம் செய்கின்றனர். பேருந்துகளை முழு அளவில் இயக்கினால் மட்டுமே நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும். காலை, மாலை நேரங்களில் அதிக பேருந்துகளை இயக்க வேண்டும்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x