Last Updated : 07 Sep, 2020 03:59 PM

 

Published : 07 Sep 2020 03:59 PM
Last Updated : 07 Sep 2020 03:59 PM

ரூ.300 கோடி மோசடி வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு நிபந்தனை முன்ஜாமீன்

ராமநாதபுரத்தில் நடைபெற்ற ரூ.300 கோடி அளவிலான நிதி நிறுவன மோசடி வழக்கில் திரைப்படத் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் நிதி நிறுவனம் நடத்திய ரூ.300 கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்டதாக நிதி நிறுவனத்தை நடத்திய நீதிமணி உட்பட பலர் மீது ராமநாதபுரம் பஜார் போலீஸார் மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் திரைப்படத் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி ஞானவேல்ராஜாவுக்கு போலீஸார் நோட்டீஸ் அனுப்பினர். இதையடுத்து இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அவர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அதில், இதுவரை 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளேன். மகாமுனி திரைப்படம் தருண் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களின் ஒருவரான நீதிமணியிடம், ரூ.6.25 கோடிக்கு விற்கப்பட்டது.

இப்பணத்தில் ரூ.2.30 கோடி வழங்கப்பட்ட நிலையில், ரூ.3.95 கோடி பாக்கியுள்ளது. இந்நிலையில் நீதிமணி மீதான பண மோசடி புகாரில் என்னை தொடர்புபடுத்தியுள்ளனர். எனக்கும் பண மோசடிக்கும் தொடர்பில்லை. எனவே முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி பாரதிதாசன் பிறப்பித்த உத்தரவில், மகாமுனி திரைப்படத்தின் திரையரங்க உரிமத்திற்காக பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. உரிமம் வழங்கப்பட்டு படமும் திரையிடப்பட்டுள்ளது.

வணிக நோக்கத்திலேயே பணப்பரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளன. எனவே, மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர் விசாரணைக்கு அழைக்கும் போது நேரில் ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதிக்கப்படுகிறது எனக் கூறியிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x