Published : 07 Sep 2020 09:50 AM
Last Updated : 07 Sep 2020 09:50 AM

வாயில் காயத்துடன் கோவையில் சுற்றிவரும் ‘மக்னா' யானைக்கு மயக்க ஊசி செலுத்தி சிகிச்சையளிப்பது பலனளிக்காது: கோவை மாவட்ட வன அலுவலர் தகவல்

கோவை வனப் பகுதியையொட்டியுள்ள பகுதிகளில் வாயில் காயத்துடன் சுற்றி வரும் ‘மக்னா' யானை.

கோவை

கோவையில் நாக்கு துண்டிக்கப்பட்டு, வாயில் காயத்துடன் சுற்றிவரும் ‘மக்னா' யானைக்கு மயக்க ஊசி செலுத்தி சிகிச்சையளிப்பது பலனளிக்காது என்று மாவட்ட வன அலுவலர் து.வெங்கடேஷ் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: கோவை மருதமலை பகுதியில் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி வாயில் காயம்பட்ட நிலையில் ஒரு ‘மக்னா' யானை சுற்றி வருவதை வனப் பணியாளர்கள் கண்டறிந்தனர். இரு தினங்களுக்குப் பிறகு அந்த யானை கேரள வனப் பகுதிக்குள் நுழைந்தது. கேரள வனத் துறையினர் மயக்க ஊசி செலுத்தி, யானையைப் பரிசோதனை செய்தனர். அப்போது, யானையின் நாக்கு முற்றிலும் துண்டிக்கப்பட்டு, வாய் சேதமடைந்துள்ளது கண்டறியப்பட்டது. பின்னர், யானை மீண்டும் காட்டுக்குள் அனுப்பிவைக்கப்பட்டது.

கடந்த ஆக. 27-ம் தேதி மீண்டும் கோவை வனப் பகுதிக்குள் நுழைந்த யானையை, வனப் பணியாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையே, அரிசி சாப்பிடுவதற்காக மருதமலை, நஞ்சுண்டாபுரம், வரப்பாளையம், ஜம்புகண்டி பிரிவு பகுதிகளில் 7 வீடுகளை யானை சேதப்படுத்தியுள்ளது. உணவைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள யானை, அடிக்கடி வழிதவறியதால் அதை வனப் பகுதிக்குள்ளேயே வைத்திருக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கிடையில், அந்த யானை சில நாட்களுக்கு மேல் உயிர்வாழாது என்றும், நாக்கு அறுபட்ட நிலையில் உணவு ஏதும் உட்கொள்ள வாய்ப்பில்லாத சூழலில், அதற்கு எந்த சிகிச்சையும் சாத்தியமில்லை எனவும் வனக் கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூழலில், யானையை மயக்க மருந்து செலுத்திப் பிடித்தால், யானை இறக்க வாய்ப்புள்ளது. அப்படியே பிடித்தாலும், அதன் வாய்ப்பகுதி முழுவதாக சேதமடைந்துள்ளதால் எந்த உணவையும் யானையால் உட்கொள்ள இயலாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x