Published : 07 Sep 2020 07:45 AM
Last Updated : 07 Sep 2020 07:45 AM

கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாதவர் மீது நடவடிக்கை; தமிழகம் முழுவதும் தீவிர வாகன சோதனை: வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

தமிழகம் முழுவதும் இன்று முதல் வாகன சோதனைகளை தீவிரப்படுத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். முகக் கவசம் அணியாதவர்கள் மீதும் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாத இடங்களிலும் போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இ-பாஸ் நடைமுறை ரத்துசெய்யப்பட்டுள்ளது. பேருந்து, ரயில் போன்ற பொது போக்குவரத்துகளும் தொடங்கி விட்டன. இதனால், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகமாகவே இருக்கிறது.

இதற்கிடையே சில ரகசிய தகவல்களின்பேரில் வாகன சோதனைகளை தீவிரப்படுத்த காவல் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இன்று (7-ம் தேதி) இரவு முதல் வாகன சோதனைகள் மீண்டும் தீவிரப்படுத்தப்படுகின்றன. இன்று முதல் மறு உத்தரவு வரும் வரைதொடர்ந்து சோதனை நடத்தவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் பகல் நேரங்களில்வழக்கமான வாகன சோதனைகளை நடத்த சாலைகளில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை உள்ளிட்ட அனைத்துவிமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் துப்பாக்கிஏந்திய வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். மாநிலங்களுக்கு இடையே இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படவில்லை. இதனால் மாநில எல்லைகளில் தமிழக போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். விடுதிகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சந்தேகநபர்கள் குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடி தகவல் கொடுக்கும்படி போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

கரோனா தடுப்பு நடவடிக்கையால் மூடப்பட்டிருந்த வணிக வளாகங்கள், கோயில்கள், பூங்காக்கள்அனைத்தும் திறக்கப்பட்டிருப்பதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக வழிபாட்டு தலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், கரோனா தடுப்பு நடவடிக்கையாக முகக் கவசம்அணிவதும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் சட்டமாக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த முகக் கவசம் அணியாதவர்கள் மீதும் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாத இடங்களிலும் போலீஸார் நேரடியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x