Published : 04 Sep 2020 10:53 AM
Last Updated : 04 Sep 2020 10:53 AM

அமலுக்கு வராத ஊதிய உயர்வு: சத்தியமங்கலம் வேட்டைத்தடுப்பு காவலர்கள் வேதனை - நிதி ஒதுக்கப்படாததே காரணம் என அதிகாரிகள் தகவல்

ஈரோடு

கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்த ஊதிய உயர்வு இதுவரை அமலுக்கு வராததால், சத்தியமங்கலம் வனக்கோட்டத்தில் பணிபுரியும் வேட்டைத்தடுப்புக் காவலர்கள் வேதனையடைந்துள்ளனர்.

தமிழக வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வனங்களின் வளங்களைப் பாதுகாக்கும் வகையில் 1,119 வேட்டை தடுப்பு காவலர்கள் பணி புரிந்து வருகின்றனர். இவர்கள் வனப்பகுதியை ஒட்டி வாழ்ந்து வரும் மலைவாழ் பழங்குடி இனத்தைச் சார்ந்தவர்களாக இருப்பதோடு, அடர்ந்த வனப் பகுதியை நன்கு அறிந்தவர்களாக உள்ளனர். வனப்பகுதியில் இருந்து மரங்கள் திருட்டு, வனவிலங்கு வேட்டையாடுதல், வனப்பகுதிக்குள் நக்சலைட் ஊடுருவலை தடுத்தல் ஆகிய பணிகளை இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

வேட்டைத்தடுப்பு காவலர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த சட்டசபைக் கூட்டத்தொடரில், இவர்களின் ஊதியம் ரூ.2,500 ஆக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.

இந்த அறிவிப்பு வெளியாகி ஒரு ஆண்டு ஆகியும் இதுவரை சத்தியமங்கலம் வனக் கோட்டத்தின் கீழ் பணிபுரியும் 102 வேட்டை தடுப்பு காவலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. அருகாமையில் உள்ள ஆசனூர் வனச்சரகத்தில் பணிபுரியும் வேட்டைத்தடுப்பு காவலர்களுக்கு, ஊதிய உயர்வு அமலாகியுள்ள நிலையில் தாங்கள் மட்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக வேட்டைத்தடுப்புக் காவலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக தலைமை வனப்பாதுகாவலர் நாகநாதனிடம் கேட்டபோது, ‘வேட்டைத்தடுப்புக் காவலர்களுக்கான ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், அதற்கான நிதி இன்னும் முழுமையாக ஒதுக்கப்படவில்லை. இதனால், சத்தி வனச்சரகத்தில் பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படாமல் இருந்தது. இருப்பினும், இதற்கான நிதி ஒதுக்கப்படும் வரை, வேறு நிதியில் இருந்து சத்தி வேட்டைத் தடுப்புக் காவலர்களுக்கு ஊதிய உயர்வை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் அவர்களுக்கும் ஊதிய உயர்வு அமலாகி விடும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x