Published : 24 Aug 2020 09:00 AM
Last Updated : 24 Aug 2020 09:00 AM

அதிமுகவினர் தனிப்பட்ட நபருக்கு விசுவாசமாக இருக்க தேவை இல்லை: நிர்வாகிகள் கூட்டத்தில் ஓபிஎஸ் பேச்சு

தொண்டர்களும், நிர்வாகிகளும் எனக்கோ அல்லது தனிப்பட்ட சிலருக்கோ விசுவாசமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கட்சிக்கு மட்டும் விசுவாசமாக இருங்கள் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறியதுபோல பல நூறு ஆண்டுகள் அதிமுக தொடர்ந்து இருக்கும். தொண்டர்களும், நிர்வாகிகளும் எனக்கோ அல்லது தனிப்பட்ட சிலருக்கோ விசுவாசமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கட்சிக்கு மட்டும் விசுவாசமாக இருங்கள். அது போதும். அவ்வாறு உள்ளவர்களே கட்சியின் பலமாக இருப்பார்கள்.

புதிய இளைஞர்கள் பலர் கட்சியில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். நமது அடுத்த இலக்கு 2021-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்பதே. இதை உணர்ந்து நிர்வாகிகளும், தொண்டர்களும் தீவிரக் களப்பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் ஒன்றிய, மாவட்ட அளவிலான நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x