Published : 20 Aug 2020 03:01 PM
Last Updated : 20 Aug 2020 03:01 PM

ஊரடங்கால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டாலும் மக்களுக்கான திட்டங்கள் சிந்தாமல் சிதறாமல் நிறைவேற்றப்படும்; முதல்வர் பழனிசாமி உறுதி

பல்வேறு திட்டப் பணிகளுக்கு காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டும் முதல்வர் பழனிசாமி

வேலூர்

ஊரடங்கால் அரசுக்குக் கிடைக்க வேண்டிய வருவாய் இழப்பு ஏற்பட்டிருந்தாலும் மக்களுக்கான திட்டங்கள் சிந்தாமல் சிதறாமல் எந்தவித தொய்வும் இல்லாமல் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள், வளர்ச்சிப் பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமி இன்று (ஆக. 20) ஆய்வு செய்தார். இதில், ரூ.73 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன் 18 ஆயிரத்து 589 பேருக்கு ரூ.169.77 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன் ரூ.55.03 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல், வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன், மாவட்ட ஆட்சியர்கள் சண்முக சுந்தரம் (வேலூர்), சிவன் அருள் (திருப்பத்தூர்), திவ்யதர்ஷினி (ராணிப்பேட்டை) மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

தொடர்ந்து மகளிர் குழுவினர், தொழிற்துறையினர், விவசாய சங்க பிரநிதிகளுடன் முதல்வர் கலந்துரையாடினார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி பேசும்போது, "தமிழகம் முழுவதும் இதுவரை 3 லட்சத்து 57 ஆயிரத்து 443 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2 லட்சத்து 96 ஆயிரத்து 171 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 6,123 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 53 ஆயிரத்து 155 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் 39 லட்சத்து 13 ஆயிரத்து 529 பேருக்கு இதுவரை கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

கரோனா சிகிச்சை பெறுபவர்களுக்கு ஒரு நாளைக்கு 20 முதல் 23 கோடி ரூபாய் உணவுக்காக செலவிடப்படுகிறது. இது புதிய நோய். மருந்து கண்டுபிடிக்கவில்லை. ஆனால், நமது மருத்துவர்கள் தங்களது திறமையால் நோய்த் தொற்று பரவுவதை தடுத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் ஊரடங்கால் நிதி இழப்பு அதிகளவில் ஏற்பட்டுள்ளது. இதற்கு முழுமையாக கணக்கு வரவில்லை. தொழிற்சாலைகள் இயங்கவில்லை, அரசுக்குக் கிடைக்க வேண்டிய வருவாயில் இழப்பு ஏற்பட்டிருந்தாலும் மக்களுக்குத் தேவையான திட்டங்களை சிந்தாமல் சிதறாமல் எந்தவித தொய்வும் இல்லாமல் செயல்படுத்தப்படும்.

வேலூர் மாவட்டத்தில் தென்பெண்ணை-பாலாறு இணைப்புத் திட்டத்தை ரூ.648 கோடியில் செயல்படுத்துவது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை அளிக்கும்படி வேப்காஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. பேரணாம்பட்டு அருகே பத்தலப்பல்லி அணை ரூ.128 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பாக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி அரசு செயல்படும். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது மத்திய அரசு சில வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. மதத்தின் சார்பில் ஊர்வலம், பொது இடங்களில் நிகழ்ச்சி நடத்தத் தடை விதித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதை அரசு கடைபிடிக்கும்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x